Last Updated : 05 Nov, 2020 05:09 PM

 

Published : 05 Nov 2020 05:09 PM
Last Updated : 05 Nov 2020 05:09 PM

நினைத்ததை நடத்தித் தருவாள் மகாலக்ஷ்மி தாயார்! 

ஐப்பசி வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மிக்கு விளக்கேற்றி, பால் பாயசம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். இல்லத்தில் இதுவரை இருந்த தரித்திர நிலையையெல்லாம் மாற்றி அருளுவாள் மகாலக்ஷ்மி தாயார். தினமும் மகாலக்ஷ்மியை வழிபடுங்கள்.

வெள்ளிக்கிழமையில் அம்பாள் வழிபாடு மிகவும் உன்னதமானது. சக்தி வழிபாடு செய்யச் செய்ய மனோ வலிமை கூடும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி, வெள்ளிக்கிழமை தோறும் மகாலக்ஷ்மியை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வாள் தேவி.

லட்சத்தைக் கோடியாக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு மத்தியில், கடனே இல்லாமல் வாழ வேண்டும், அடகில் இருக்கும் நகைகளையெல்லாம் மீட்க வேண்டும், குடிசை வீடாக இருந்தாலும் சொந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் ஏக்கத்துடன் இருப்பவர்களும்தான் அதிகம். இவர்களின் கண்ணீரையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றித் தருவதற்குக் காத்துக்கொண்டிருக்கிறாள் மகாலக்ஷ்மி.

வீட்டில் இருக்கும் மகாலக்ஷ்மி படத்தை சுத்தப்படுத்துங்கள். வெள்ளிக்கிழமையில் காலை வேளையில், தலைக்குக் குளித்துவிட்டு, பூஜையறையிலும் வாசலிலும் கோலமிடுங்கள். மகாலக்ஷ்மி படத்துக்கு சந்தனம் குங்குமமிட்டுக் கொள்ளுங்கள். தாயாருக்கு உகந்த வெண்மை நிற மலர்களைச் சூட்டுங்கள்.

அம்பாள் ஸ்லோகங்களைச் சொல்லுங்கள். பாடல்களைப் பாராயணம் சொல்லுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். அல்லது ஸ்தோத்திரத்தை ஒலிக்க விட்டு காதாரக் கேளுங்கள்.

மகாலக்ஷ்மி மிக வலிமையானவள். சாந்தமும் கருணையும் கொண்டவள். தனம் தானியம் பெருக்கித் தருபவள். தரித்திரத்தை அடியோடு விரட்டியடிப்பவள். ஐஸ்வரியத்தை குடியேறச் செய்பவள். மகாலக்ஷ்மியின் மூல மந்திரம் இன்னும் வலிமை மிக்கது.

மகாலக்ஷ்மி படத்துக்கு முன்னே அமர்ந்துகொண்டு, மூல மந்திரத்தை சொல்லுங்கள். 11 முறை சொல்லலாம். 24 முறை சொல்லலாம். 54 முறை அல்லது 108 முறை சொல்லி ஜபிக்கலாம். வெள்ளிக்கிழமையில் இந்த மூல மந்திரத்தைச் சொல்லத் தொடங்குங்கள். பின்னர், தினமும் சொல்லி வாருங்கள். தினமும் பால், பழம் என ஏதேனும் நைவேத்தியம் செய்யுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பால் பாயசம், கடலைப் பருப்பு பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒன்று நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.

மகாலக்ஷ்மியின் மூல மந்திரம் :

ஓம் ஸ்ரீம் க்லீம் மகாலக்ஷ்மி

மகாலக்ஷ்மி ஏய்யேஹி

ஏய்யேஹி சர்வ

ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வாருங்கள். வளர்பிறை வெள்ளிக்கிழமையின் போது, சுமங்கலிகளை அழைத்து மங்கலப் பொருட்களை வழங்குங்கள். நீங்கள் இதுவரை கஷ்டப்பட்டு வந்த கடனையெல்லாம் அடைப்பதற்கு வழிவகைகள் செய்து அருளுவாள் மகாலக்ஷ்மி. இல்லத்தில் இதுவரை இருந்த தரித்திர நிலையை மாற்றி, சுபிட்சத்தையும் ஐஸ்வர்யத்தையும் இல்லத்தில் நிறைத்து அருளுவாள் தாயார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x