Last Updated : 04 Nov, 2020 11:47 AM

 

Published : 04 Nov 2020 11:47 AM
Last Updated : 04 Nov 2020 11:47 AM

திருவெண்காட்டு ஈசனைப் பாடுவோம்! 

திருவெண்காட்டு தேவாரப் பதிகங்களை சோமவாரத்திலும் மாத சிவராத்திரியிலும் திருவாதிரை நட்சத்திர நாளிலும் மனதாரப் பாடி வேண்டிக்கொள்ளுங்கள். மங்கல காரியங்களை நடத்தித் தருவார் திருவெண்காட்டு ஈசன்.

சீர்காழி அருகே உள்ள திருத்தலம் திருவெண்காடு. இந்தத் தலத்து இறைவன் ஸ்வேதாரண்யேஸ்வரர். நவக்கிரக திருத்தலங்களில் இது புதன் பரிகாரத் திருத்தலம். இங்கே புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது.

பாடல் பெற்ற திருத்தலம் இது. திருநாவுக்கரசர் இந்தத் தலத்துக்கு வந்து மூன்று தேவாரப் பதிகங்கள் பாடியுள்ளார். ‘முக்குள நீராடி வழிபடுவர் பிள்ளைப்பேறு அடைவர் என்றும் நினைத்த காரியங்கள் ஈடேறப்பெறுவர் என்றும் அவர்களை தீவினைகள் தாக்காது என்றும் வணங்குவோரின் நோய்கள் நீங்கச் செய்யும் தலைவன் என்றும் இந்தத் தலத்துக்குப் பெருமைகளைச் சொல்லியிருக்கிறார் திருஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்களைப் பாடி, இங்கே இந்தத் தலத்தில் உள்ள மூன்று திருக்குளங்களில் நீராடி சிவ தரிசனம் செய்தால், நோய்கள் நீங்கப் பெறலாம். பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம். தீராத வினைகளையும் தீர்த்தருளுவார் சிவனார்.

அதேபோல், திருநாவுக்கரசர் பெருமானும் இந்தத் தலத்துக்கு வந்து தேவாரப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய இரண்டு பதிகங்களையும் பாடினால் எண்ணற்ற பலன்களை அடையப் பெறலாம். இந்த பதிகங்களைப் பாடி சிவனாரை வணங்கித் தொழுதால், ஞானமும் முக்தியும் பெறலாம்.

இந்தக் கோயிலின் இறைவனை சுந்தரர் பெருமான், ஒரு பதிகம் பாடி போற்றியுள்ளார். இந்தப் பாடலின் முற்பகுதியில், சிவனாரின் சிறப்புகளை மெய்யுருகிச் சொல்லியுள்ளார். இந்தப் பதிகங்களைப் பாடி இறைவனை வணங்கிப் பிரார்த்தித்தால், இல்லறத்தில் ஒற்றுமை நீடிக்கும். பரஸ்பரம் புரிந்துகொண்டு கணவனும் மனைவியும் விட்டுக்கொடுத்துச் செல்வார்கள்.

மேலும் மாணிக்கவாசகர் திருவெண்காட்டு இறைவனைப் பாடியிருக்கிறார். திருவாசகத்தில் திருவெண்காட்டின் பெருமையையும் ஸ்வேதாரண்யேஸ்வரரின் பெருமையையும் சிலிர்த்து வியந்து போற்றியிருக்கிறார்.

‘வெண்காடன்’ என்று பட்டினத்தார் திருவெண்காட்டு சிவனாரைப் போற்றிப் பாடியிருக்கிறார்.

திருவெண்காட்டு தேவாரப் பதிகங்களை சோமவாரத்திலும் மாத சிவராத்திரியிலும் திருவாதிரை நட்சத்திர நாளிலும் மனதாரப் பாடி வேண்டிக்கொள்ளுங்கள். மங்கல காரியங்களை நடத்தித் தருவார் திருவெண்காட்டு ஈசன்.

மேலும் புதன் பகவானை மனதார வேண்டுங்கள். வேண்டிய வரங்களைத் தந்தருள்வார்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x