Last Updated : 04 Nov, 2020 10:54 AM

 

Published : 04 Nov 2020 10:54 AM
Last Updated : 04 Nov 2020 10:54 AM

சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக தரிசனம்!

சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுகனை தரிசிப்போம். நம் கஷ்டங்களையெல்லாம் போக்கியருளுவார் விநாயகர். விக்னங்களையெல்லாம் தீர்த்துவைப்பார் கணபதி பெருமான். இன்று 4ம் தேதி புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி.

எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் வணங்கும் தெய்வம் பிள்ளையார். முதலில் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான், மற்ற தெய்வங்களை வணங்குவோம். ஆலயங்களிலும் முதலில் விநாயகப் பெருமானின் சந்நிதிதான் அமைக்கப்பட்டிருக்கும். கோபுர வாசலுக்குள் நுழைந்து, விநாயகர் சந்நிதியைக் கடந்து உள் மண்டபங்களுக்குச் செல்வோம்.

ஹோமம் முதலான பூஜைகளிலும் முதலில் விநாயகரை அழைத்து, அமர வைத்துவிட்டுத்தான் பூஜையைத் தொடங்குவது வழக்கம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்துவிட்டு பூஜையைத் தொடங்குவோம்.

கணங்களுக்கு அதிபதி விநாயகர்தான். அதனால்தான் அவருக்கு கணபதி என்றே திருநாமம் அமைந்தது. நம் விக்னங்களையெல்லாம் தீர்த்து வைப்பவர் பிள்ளையார். அதனால்தான் விக்ன விநாயகர் என்று திருநாமம் அமைந்தது.

முருகப்பெருமானுக்கு சஷ்டி போல், பெருமாளுக்கு ஏகாதசி போல, சிவனாருக்கு திருவாதிரை போல, விநாயகப் பெருமானுக்கு சதுர்த்தியன்று பூஜிப்பதும் விரதம் மேற்கொள்வதும் வழக்கம். இதைத்தான் சங்கட ஹர சதுர்த்தி என்று போற்றுகிறோம்.

சஷ்டியிலும் கிருத்திகையிலும் முருகக் கடவுளுக்கு விரதம் மேற்கொள்வது போல, ஏகாதசியில் பெருமாளுக்கு விரதம் மேற்கொள்வது போல, சிவராத்திரியிலும் பிரதோஷத்திலும் விரதம் இருப்பது போல, சங்கடஹர சதுர்த்தியிலும் விநாயகருக்கு விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள்.

சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சார்த்தி, வெள்ளெருக்கு மாலை சார்த்தி வேண்டிக்கொள்வது மகத்தான பலன்களைத் தந்தருளும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விநாயகரை தரிசியுங்கள். மனதார உங்களின் பிரார்த்தனைகளைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

உங்கள் வேதனைகளையெல்லாம் தீர்த்தருள்வார் கணபதி. கஷ்டங்களையெல்லாம் போக்குவார் ஆனைமுகன். சங்கடங்களையெல்லாம் நீக்கியருளுவார் பிள்ளையார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x