Last Updated : 03 Nov, 2020 03:51 PM

 

Published : 03 Nov 2020 03:51 PM
Last Updated : 03 Nov 2020 03:51 PM

மேஷ ராசிக்காரர்கள் முதல் மீன ராசிக்காரர்கள் வரை; 12 ராசிக்காரர்களுக்கும் எளிய மந்திரங்கள்; வழிபாடுகள்! 

வழிபாடு என்பது நல்ல அதிர்வுகள் கொண்டவை. பிரார்த்தனைக்கு எப்போதுமே வலிமை உண்டு. ஆலயங்களும் அங்கே குடிகொண்டிருக்கும் தெய்வசக்திகளும் சாந்நித்தியத்துடன் திகழ்கின்றன. நம் மனமானது வேறு திசையில் பயணித்தாலோ முந்தைய பிறவியின் பாவங்களால் இந்தப் பிறவியில் கெடுபலன்களை அனுபவிக்க நேர்ந்தாலோ... வழிபாடுகளும் பிரார்த்தனைகளுமே அவற்றில் இருந்து ஓரளவேனும் நம்மை காப்பாற்றுகின்றன. வழிநடத்துகின்றன.

பனிரெண்டு ராசிகள். பனிரெண்டு ராசிக்காரர்களும் தனித்தனியே வழிபட்டு பலன் பெறுவதற்கான ஸ்லோகங்கள் சாஸ்திரத்தில் அமைந்திருக்கின்றன. இந்த ஸ்லோகங்களையும் வழிபாடுகளையும் ஒவ்வொரு ராசிக்காரர்களும் உச்சரித்து, வழிபட்டு வந்தால், நல்ல நல்ல பலன்களை அடையலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மேஷ ராசி: முருகப்பெருமான் வழிபாடு
மேஷ ராசியில் பிறந்தவர்கள் சொல்லவேண்டிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை 27 முறை கூறி முருகப் பெருமானுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்.

ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்

முடியும் போதெல்லாம் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். வளம் பெறுவீர்கள்.

ரிஷப ராசி: மகாலக்ஷ்மி வழிபாடு

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்தும் வழிபடவேண்டும். இந்த ஸ்லோகத்தை தினமும் 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ லக்ஷ்மீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ

அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, தாயார் சந்நிதியில் மனமுருக வேண்டிக்கொள்ளுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் பெறுவீர்கள்.

மிதுன ராசி: மகாவிஷ்ணு வழிபாடு

மிதுன ராசியில் பிறந்தவர்கள் மகாவிஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தை தினமும் 54 முறை சொல்லி வாருங்கள். நல்ல பலன்களெல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

இந்த ஸ்லோகத்தைச் சொல்லுவதும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கோ கிருஷ்ணர் கோயிலுக்கோ சென்று தரிசித்து வருவதும். எதிர்ப்புகளை அழிக்கும். இன்னல்களைப் போக்கும்.

கடக ராசி: சிவ சக்தி வழிபாடு

கடக ராசியில் பிறந்தவர்கள் பெளர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, இந்த மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, அருகில் உள்ள ஆலயம் சென்று, சிவனாரையும் அம்பாளையும் தரிசித்து வாருங்கள். மங்கல காரியங்கள் நடக்கும். மங்காத செல்வம் கிடைக்கும்.

சிம்ம ராசி: சூரிய வழிபாடு

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்து வந்தால் கிரக தோஷங்கள் விலகும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். அருகில் உள்ள கோயிலில் நவக்கிரகத்தில் உள்ள சூரிய பகவானை வணங்கி வழிபடுங்கள். கிரக தோஷங்கள் விலகும். இல்லத்தில் சுபிட்சம் நிலவும்.

கன்னி ராசி: புதன், மகாவிஷ்ணு வழிபாடு

கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஏதேனும் ஒரு புதன்கிழமையில் மகாவிஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன்கள் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். புதன்கிழமையிலேனும் சொல்லுங்கள். பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள். காரியம் யாவும் வெற்றியாகும்.

துலாம் ராசி: சுக்கிரன், சத்யநாராயணா வழிபாடு

துலாம் ராசியில் பிறந்தவர்கள் மாதந்தோறும் பெளர்ணமி அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். நேரம் கிடைக்கும் தருணத்தில், ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்குச் சென்று வணங்கி வாருங்கள். சுக்கிர யோகம் கிடைக்கப் பெறுவீர்கள்.

விருச்சிக ராசி: செவ்வாய், முருக வழிபாடு

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்கையை பூஜித்து வணங்கி வாருங்கள். இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வந்தால் கிரக தோஷங்கள் விலகும். நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரதம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச
மங்கலம் ப்ரணமாம்யஹம்.

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய் பகவான் மற்றும் முருகப்பெருமானை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். கிரக தோஷம், கிரக பாதிப்பு விலகும். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கப் பெறுவீர்கள்.

தனுசு ராசி: குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். குரு தட்சிணாமூர்த்தியையும் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். குரு யோகமும் குருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

மகர ராசி: சனீஸ்வர வழிபாடு

மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் வெற்றியாகும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, தினமும் காகத்துக்கு எள் கலந்த சாதம் வழங்குங்கள். நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரரை தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட காரியங்கள் நடந்தேறும்.

கும்ப ராசி: அனுமன் வழிபாடு

கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைத்து வாழ்வில் முன்னுக்கு வருவீர்கள்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இன்னல்கள் காணாமல்போகும்.

மீன ராசி: சிவ வழிபாடு

மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். துன்பங்கள் நீங்கும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். அருகில் உள்ள சிவாலயம் சென்று, சிவனாருக்கு வில்வார்ச்சனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதெல்லாம் தந்தருள்வார் ஈசன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x