Last Updated : 02 Nov, 2020 04:56 PM

 

Published : 02 Nov 2020 04:56 PM
Last Updated : 02 Nov 2020 04:56 PM

வீடு, மனை யோகம் தருவார் செவ்வாய் பகவான்; ஏன், எதனால்?

உலக உயிர்களையெல்லாம் பிரம்மா படைத்தார். அதனால்தான் அவரை படைப்புக் கடவுள் என்று போற்றுகிறோம். அப்படி படைப்பதற்காக, சப்தரிஷிகளை உருவாக்கினார் பிரம்மா என்கிறது புராணம்.

சப்த ரிஷிகளில், காஸ்யபருக்கும் அதிதிக்கும் பிறந்தவர் சூரிய பகவான். அத்திரி மகரிஷிக்கும் அனுசுயாவுக்கும் பிறந்தவர் சந்திரன். சப்தரிஷிகளில் பரத்வாஜ முனிவரும் ஒருவர். பரத்வாஜருக்குப் பிறந்தவர்தான் குஜன். இந்த குஜன் தான் செவ்வாய். நவக்கிரகங்களில் ஒரு கிரகமாகத் திகழ்பவர்தான் செவ்வாய் பகவான்.

நர்மதை நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து தவம் செய்து வந்தார் பரத்வாஜ முனிவர். தவத்தை மீறி தடம் மாறியதால் பிறந்தவர்தான் செவ்வாய் பகவான். இதனால் தேவகன்னி கருவுற்றாள். ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். ஆனால் குழந்தையுடன் தேவலோகம் செல்லமுடியாத நிலை. பரத்வாஜ முனிவரிடமும் கொடுத்து வளர்க்க முடியாத சூழல். நர்மதைக் கரையிலேயே குழந்தையை விட்டுச் சென்றாள். அந்தக் குழந்தைதான் செவ்வாய் பகவான் என்கிறது புராணம்.

அந்தக் குழந்தை, பசியால் அழுதது. கதறியது. தரையில் கிடத்தப்பட்டிருந்த அந்தக் குழந்தையின் அழுகுரல், பூமாதேவியைக் கலங்கடித்தது. அந்தக் குழந்தையை எடுத்தாள். மார்பில் சாய்த்துக்கொண்டாள். ஆதரவற்ற குழந்தையை அரவணைத்துக் காத்தாள். இதனால்தான் செவ்வாய் பகவான், பூமி காரகன் என்று அழைக்கப்படுகிறார். பூமி, இடம், மனை, வீடு சம்பந்தமான சகல யோகங்களையும் தந்தருளக்கூடியவராக அருள்பாலிக்கிறார் செவ்வாய் பகவான்.

வளர்ந்து சிறுவனான சமயத்தில், தன் தந்தை பற்றி பூமாதேவியிடம் கேட்க, ‘நான் உன்னைப் பெற்றவளில்லை. தேவகன்னியின் மைந்தன் நீ. உன்னுடைய தாய், தேவலோகத்தைச் சேர்ந்தவள். உன்னுடைய தந்தை சிவனாரிடம் வரங்களைப் பெற்ற சப்த ரிஷிகளில் ஒருவர். அவர் பெயர் பரத்வாஜர்’ எனத் தெரிவித்தார்.
இதன் பின்னர், பரத்வாஜரிடம் உண்மையையெல்லாம் எடுத்துரைத்து, மகனை அவரிடம் ஒப்படைத்தார். அவருக்கு சகல ஆசிகளையும் அருளையும் வழங்கினார் என விவரிக்கிறது புராணம்.

அந்தக் குழந்தைக்கு அதுவரை பெயர் சூட்டப்படவில்லை. தந்தையிடம் சேர்ந்த சிறுவனுக்கு, பெயர் சூட்டப்பட்டது. தேகத்திலும் முகத்திலும் தேஜஸ் ததும்ப நின்ற சிறுவனுக்கு அங்காரகன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் பரத்வாஜ முனிவர். சிவனாரிடம் கற்றறிந்த வேதங்கள் அனைத்தையும் மகனுக்கு போதித்து அருளினார்.
மேலும் போர்க்களத்தின் சூட்சுமங்களையும் சொல்லிக் கொடுத்தார். இதனால் சேனாதிபதி பட்டத்தையும் பெற்றார் அங்காரகன்.

விநாயகரை தவமிருந்து அவரின் அருள்பெற்ற அங்காரகன், முருகப்பெருமானின் அருளையும் பெற்றார். தேவர்களுக்கு நிகரான அந்தஸ்து வேண்டும் என விநாயகரிடம் வரம் கேட்டார் அங்காரகன்.

அதன்படி அங்காரகனுக்கு அந்தஸ்து வழங்கப்பட்டது. மேலும் நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, செவ்வாய் கிரகமாக வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் வரத்தையும் பெற்றார்.

உலக உயிர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும் தீயவற்றையும் அருளும் இடத்தில், நவக்கிரகத்தில் முக்கியக் கிரகமாக இருந்து அருள்பாலிக்கிறார் அங்காரகன் எனப்படுகிற செவ்வாய் பகவான்!

செவ்வாய்க்கிழமையில், நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானை, வைத்தீஸ்வரன் கோயிலில் குடிகொண்டு அருள்பாலிக்கும் அங்காரகனை வழிபட்டு வந்தால், கிரக தோஷம் அனைத்தும் விலகும். குறிப்பாக செவ்வாய் தோஷம் நீங்கும். வீடு மனை வாங்கும் யோகத்தைத் தந்தருள்வார் செவ்வாய் பகவான்!

பூமாதேவி வளர்த்தெடுத்த செவ்வாய் பகவானை வணங்குவோம். வீடு மனை யோகத்தைப் பெறுவோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x