Last Updated : 19 Oct, 2020 10:30 AM

 

Published : 19 Oct 2020 10:30 AM
Last Updated : 19 Oct 2020 10:30 AM

ஞானம், யோகம், கலை, கல்வி தந்தருள்வாள் சரஸ்வதிதேவி!  

நவராத்திரி வைபவம் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கிறது. வீடுகளில் கொலு வைப்பதும் தெரிந்தவர்களையும் அறிந்தவர்களையும் அழைப்பது, குழந்தைகள் ஆர்வத்துடன் கொலு பொம்மைகளைப் பார்ப்பது குதூகலங்களும் பூஜைகளும் வழிபாடுகளும் நிறைந்திருக்கும் நாட்கள் இவை.

நவராத்திரி என்பது ஒன்பது நாள் பண்டிகை. பத்தாம் நாளும் பண்டிகைதான். பத்து என்றால் தசம். தசமி என்பது பத்தாம் நாள். நவராத்திரி ஒன்பது நாள் முடிந்து பத்தாம் நாள்... விஜய தசமி. கலைகளுக்கும் கல்விக்கும் ஞானத்துக்கும் யோகத்துக்கும் அதிபதியான சரஸ்வதிதேவியை ஆத்மார்த்தமாக ஆராதித்து, வணங்கி, வழிபடக்கூடிய அற்புதமான நாள்.

தமிழகத்தில் சரஸ்வதிதேவிக்கு ஆலயங்கள் குறைவுதான். கூத்தனூரில் சரஸ்வதியைப் பிரதானமாகக் கொண்டு ஆலயம் உள்ளது.

* தஞ்சை மாவட்டம் திருக்கண்டியூருக்கு அருகில் உள்ளது திருப்பூந்துருத்தி. இங்கே உள்ள இறைவனின் திருநாமம் ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர். இந்தக் கோயில் கருவறைக் கோட்டத்தில் சரஸ்வதி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். மேலிரண்டு கரங்களில் அட்சமாலை- சுவடியும், முன்னிரு கரங்களில் அபய, ஊரு முத்திரையுடனும் அற்புதமாகக் காட்சி தருகிறாள் சரஸ்வதிதேவி.

* வேலூர்- தோட்டப்பாளையம் ஸ்ரீதாரகேஸ்வரர் திருக்கோயிலில் கோஷ்ட தெய்வமாக பிரம்மா திகழ்கிறாள். பிரம்மாவுக்கு எதிரில் அவரின் துணைவியார் கலைமகள் காட்சி தருகிறாள்.

* கும்பகோணம் அருகில் உள்ளது திருவீழிமிழலை திருத்தலம். ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீசாவித்திரி ஆகிய மூன்று தேவியரும் தனித்தனியே சிவ லிங்கம் ஸ்தாபித்து சிவபூஜை செய்தனர். இவர்கள் வழிபட்ட லிங்கத் திருமேனிகள் முறையே சரஸ்வதீஸ்வரர், காயத்ரீஸ்வரர், சாவித்ரீஸ்வரர் என அழைக்கப்படுகின்றன.

* குமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் தனிக் கோயிலில் அருள் புரிகிறாள் சரஸ்வதிதேவி. இந்தத் தலத்து சரஸ்வதி தேவியை கவிச் சக்ரவர்த்தி கம்பர் வழிபட்டார் என்கிறது வரலாறு.

* தஞ்சாவூர் பெரிய கோயில் தென்புற வாயிலின் மேல் திசையில் இரண்டு திருக்கரங்கள் கொண்ட சரஸ்வதிதேவியின் சிற்பம் உள்ளது.

* ராஜராஜ சோழனைப் போலவே அவர் மகன் ராஜேந்திரன் சோழனும் மிகப் பிரமாண்ட கோயிலை எழுப்பினான். அதுவே கங்கை கொண்ட சோழபுரம். இந்தக் கோயிலின் வடக்கு வாசல் மாடத்தில், நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் மேற்குத் திசை நோக்கி அமர்ந்த நிலையில் ஞானசரஸ்வதி காட்சி தரும் அழகிய சிற்பம் உள்ளது.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கிழக்கு நோக்கிய தனிச் சந்நிதியில் அமைந்துள்ள சரஸ்வதி தேவியை தரிசிக்கலாம். மேலும் கீழமாட வீதியில் கோமதி அம்மன் கோயிலிலும், தனிச் சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் சரஸ்வதி அருள் புரிகிறாள்.

விஜயதசமியில் சரஸ்வதிதேவியை வழிபடுவோம். ஆராதிப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x