Last Updated : 15 Oct, 2020 04:16 PM

 

Published : 15 Oct 2020 04:16 PM
Last Updated : 15 Oct 2020 04:16 PM

புரட்டாசி கடைசி வெள்ளியில் மகாலக்ஷ்மி தாயாருக்கு பாயசம்!

புரட்டாசி கடைசி வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மி தாயாருக்கு பாயசம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். இல்லத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்வாள். வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

புரட்டாசி மாதம் என்பது திருமாலை வழிபடுவதற்கு உரிய மாதம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரத்தில் தெரிவித்தாலும் ஸ்ரீமந் நாராயணனை வழிபடுவதற்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதத்தையே கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.

சைவ வைணவ பேதமின்றி, இந்த மாதத்தில்தான், நெற்றியில் திருமண் இட்டுக்கொள்வார்கள் பக்தர்கள். பனிரெண்டு தமிழ் மாதங்களில், வேறு எந்த மாதத்திலும் இல்லாத வகையாக பக்தர்கள் புரட்டாசியில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். ‘இது புரட்டாசி மாசம், இந்த மாசத்துல நாங்க அசைவம் சாப்பிடமாட்டோம்’ என்பார்கள்.

அந்த அளவுக்கு புனிதம் மிக்க மாதமாக போற்றப்படுகிறது புரட்டாசி. மேலும் இந்த மாதத்தில்தான் பெருமாள் கோயில்களில், பிரம்மோத்ஸவ விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.

பெருமாள் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவே, மகாலக்ஷ்மியின் வழிபாட்டுக்கும் புரட்டாசி மாதத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெருமாளின் திருமார்பில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மித் தாயாரை இந்த மாதத்தில் வழிபட்டால், திருமால் குளிர்ந்து போவாராம். மகாலக்ஷ்மி தாயாரும் மகிழ்ந்து, நமக்கு அருளச் சொல்லி மகாவிஷ்ணுவிடம் சிபாரிசு செய்வாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மகாலக்ஷ்மியை தொடர்ந்து புரட்டாசி வெள்ளிக்கிழமைகளிலும் ஏனைய வெள்ளிக்கிழமைகளிலும் வணங்கி வந்தால், வீட்டின் தரித்திர நிலை காணாமல் போகும். வறுமையும் பீடையும் விலகிவிடும். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பாள் மகாலக்ஷ்மி.

மகாலக்ஷ்மி தாயாரை, வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். முடியும்போதெல்லாம் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குங்கள். தாமரை மற்றும் வெண்மை நிற மலர்கள் சூட்டி அலங்கரியுங்கள். நம் அல்லல்களையெல்லாம் போக்கியருளுவாள் தாயார்.

நாளைய தினம் 16ம் தேதி வெள்ளிக்கிழமை புரட்டாசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. புரட்டாசி மாதத்தின் கடைசி நாளும் கூட. சுக்கிர வாரம் என்று போற்றப்படும் வெள்ளிக்கிழமையில், வீட்டில் விளக்கேற்றி, மகாலக்ஷ்மியை ஆராதனை செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லுங்கள். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.

மகாலக்ஷ்மி தாயாருக்கு, பாயசம் நைவேத்தியம் செய்து பூஜையை நிறைவு செய்யுங்கள். அமாவாசையும் இணைந்து வருவதால், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர்சாதம் என சித்ரான்னம் நைவேத்தியம் செய்வதும் விசேஷமானது. உங்கள் கஷ்டங்களையும் வீட்டின் அல்லல்களையும் போக்கி அருளுவாள் மகாலக்ஷ்மி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x