ஒரே தலத்தில்... உமையவள், சரஸ்வதி, மகாலக்ஷ்மி, துர்கை; தாலி பாக்கியம் தரும் லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில்

ஒரே தலத்தில்... உமையவள், சரஸ்வதி, மகாலக்ஷ்மி, துர்கை; தாலி பாக்கியம் தரும் லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில்
Updated on
1 min read

சப்தரிஷிகளும் தவமிருந்து வணங்கி வழிபட்டு பூஜைகள் செய்த திருத்தலம் என்பதால், சப்தரிஷிகளுக்கும் சிவனார் திருக்காட்சி தந்தருளியதால், இங்கே உள்ள ஈசனுக்கு சப்தரிஷீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது என்கிறது ஸ்தலபுராணம். லால்குடியில் உள்ளது சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.

திருச்சிக்கு அருகிலுள்ளது லால்குடி. இங்கே அமைந்துள்ள அற்புத ஆலயத்தில் குடிகொண்டிருக்கிறார் சிவனார். இங்கே சிவனாரின் திருநாமம் -ஸ்ரீசப்தரிஷீஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபெருதிருப்பிராட்டியார்.

புராண - புராதனப் பெருமை கொண்ட திருத்தலம். இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... சிதம்பரம் திருத்தலத்துக்கு அடுத்தபடியாக, மார்கழி மாத திருவாதிரை திருநட்சத்திர நன்னாளில், ஆருத்ரா தரிசனமும் இரவில் ஆனந்தத் திருநடனமும் இங்கு விமரிசையாக நடைபெறுகிறது.

அதேபோல், திருக்கடையூர் திருத்தலத்துக்கு இணையாக இங்கே உள்ள அமிர்தகடேஸ்வரர் சந்நிதியில், சஷ்டியப்த பூர்த்தி எனப்படும் அறுபதாம் கல்யாணமும் சதாபிஷேகம் எனப்படும் எண்பதாம் கல்யாண வைபவமும் இங்கு விமரிசையாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வைபவத்தை செய்துகொள்கின்றனர்.

மகாலட்சுமி தாயார், இங்கு இந்தத் தலத்தில் கடும் தவம் புரிந்து மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டாள் என்கிறது ஸ்தல புராணம். எனவே இந்தத் தலத்துக்கு வந்து, சப்தரிஷீஸ்வரரை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

அற்புதமான திருத்தலம். அழகிய திருக்கோயில். கோயிலின் ஸ்தல விருட்சம் அரசமரம். கோயிலில் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தமும் விசேஷமானது.
லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலின் மற்றுமொரு சிறப்பு... பெருந்திருப்பிராட்டியூர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீமகாலட்சுமி முதலானோர் அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம்.

இங்கு, அம்பாள், சரஸ்வதி, மகாலட்சுமி தாயார், துர்கை முதலானோருக்கு புடவை சார்த்தி வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். தாலி பாக்கியம் நிலைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள். கடன் முதலான தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஏழு முனிவர்கள் வழிபட்ட திருத்தலம் இது. சப்தரிஷிகளும் தவமிருந்து வணங்கி வழிபட்டு பூஜைகள் செய்த திருத்தலம் என்பதால், சப்தரிஷிகளுக்கும் சிவனார் திருக்காட்சி தந்தருளியதால், இங்கே உள்ள ஈசனுக்கு சப்தரிஷீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது என்கிறது ஸ்தலபுராணம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in