Last Updated : 05 Oct, 2020 08:39 PM

 

Published : 05 Oct 2020 08:39 PM
Last Updated : 05 Oct 2020 08:39 PM

சொந்த வீடு யோகம் தருவார் செவ்வாய் பகவான்! 

சொந்த வீட்டு கனவை நிறைவேற்றி அருளுவார் செவ்வாய் பகவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்து அருளுவார். செவ்வாய் முதலான தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுவார் செவ்வாய் பகவான்.

நாம் ஒரு வேலையைச் செய்யவேண்டும் என்றால், ஒரு காரியத்தில் இறங்கவேண்டும் என்றால், நம்முடைய உடலிலும் புத்தியிலும் தெம்பு வேண்டும். பலம் வேண்டும். உடலில் மட்டும் பலம் இருந்து, புத்தியில் தெம்பு இல்லாவிட்டாலும், புத்தியில் பலம் இருந்து உடல் தெம்பு இல்லாமல் இருந்தாலும் நம்மால் செயல்படமுடியாது. உடலுக்குப் போதுமான சக்தியையும் புத்திக்குத் தேவையான சிந்திக்கக்கூடிய பலத்தையும் தந்தருள்பவர் செவ்வாய் பகவான் என்கிறது புராணம்.

நவக்கிரகங்களில் முக்கியமான தெய்வம் செவ்வாய் பகவான். வாழ்க்கையில் ஒருகட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு செவ்வாய் கிரகத்தின் அனுக்கிரகம் அவசியம் தேவை. சிறு வயதில், கல்வி இருந்தால்தான் அடுத்தகட்டத்துக்கு வளரமுடியும். அதனால்தான் புத்தியில் பலத்தைத் தருகிறார் செவ்வாய் பகவான். படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் போது, உடலில் பலம் வேண்டும். அந்த பலத்தையும் வழங்குகிறார் செவ்வாய் பகவான்.

அதுமட்டுமா? படிப்பு, வேலைக்குப் பின்னர் திருமணம் எனும் சந்ததி வளர்க்கும் விஷயம். சந்ததியை வளர்க்க, திருமணம் அவசியம். வாழ்க்கைத் துணை அவசியம். செவ்வாய் தோஷம் முதலான கிரக பலவீனம் இருந்தால், திருமணம் நடப்பது தடைப்படும். அதனால்தான் செவ்வாய் தோஷம் குறித்து விளக்குகிறது ஜோதிட சாஸ்திரம்.
படிப்பு, உத்தியோகம், திருமணம் என நல்லவிதமாக கைகூடி வரவேண்டும். அதன் பிறகு சொந்தவீடு என்பது எல்லோருக்குமான பெருங்கனவு. வாழ்வின் ஆகப்பெரிய பெரிய ஆசை. சொந்தவீடு என்பதன் மீது ஆசைப்படாதவர்களே இல்லை எனலாம்.

செவ்வாய் பகவான், பூமித்தாயின் மகன். பூமாதேவியின் மைந்தன். அதனால்தான் செவ்வாய் பகவானை பூமிகாரகன் என்கிறார்கள். செவ்வாய் பகவானையும் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானையும் வணங்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

செவ்வாய் பகவானை, செவ்வாய் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கி வழிபடுங்கள். செவ்வாய்க்கிழமையன்று வணங்குவதும் நவக்கிரகங்களைச் சுற்றி வரும் போது, செவ்வாய் பகவானை மனதில் வேண்டிக்கொண்டு, செவ்வாய் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

செவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம் :
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்

எனும் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். செவ்வாய் பகவான் காயத்ரியை 54 முறை அல்லது 108 முறை என தினமுமே சொல்லி வழிபடலாம்.

சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரியை ஜபித்து வாருங்கள்.

சொந்த வீட்டு கனவை நிறைவேற்றி அருளுவார் செவ்வாய் பகவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்து அருளுவார். செவ்வாய் முதலான தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுவார் செவ்வாய் பகவான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x