Last Updated : 29 Sep, 2020 07:05 PM

 

Published : 29 Sep 2020 07:05 PM
Last Updated : 29 Sep 2020 07:05 PM

பெளர்ணமியில் குலதெய்வ வழிபாடு

புரட்டாசி மாத பெளர்ணமியில், குலதெய்வத்தையும் பெருமாளையும் மனதார வழிபட்டு வந்தால், மனதாரப் பிரார்த்தனை செய்தால், மகத்தான பலன்களைப் பெறலாம். வீட்டில் இதுவரை இருந்த தரித்திர நிலையில் இருந்து விடுபடலாம்.

புரட்டாசி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதம். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை நினைத்து தியானிப்பதும் பெருமாளை ஆலயத்துக்குச் சென்று தரிசிப்பதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது. சிறப்பான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பெளர்ணமி, முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்தநாளில், நல்ல அதிர்வலைகள் உலகில் வியாபித்திருக்கும். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாளில், தேவி வழிபாடு செய்வது தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும். அம்மன் கோயிலுக்குச் சென்று பெளர்ணமி நன்னாளில் வழிபடுங்கள். வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

அதேபோல், வீட்டில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவதும் வீடு மனை முதலான செல்வங்களை வாங்குகிற பாக்கியத்தைக் கொடுக்கவல்லது என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். ஒவ்வொரு பெளர்ணமியிலும் மாலையில், சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அம்பாளை ஆராதிப்பது விசேஷமானது. தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும்.

முக்கியமாக, பெளர்ணமி நாளில், குல்தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. இந்த நன்னாளில், குலதெய்வக் கோயில் அருகில் இருந்தால், சென்று வழிபட்டு வருவது நன்மைகளை வாரி வழங்கும். சந்ததியினர் சிறக்க வாழ்வார்கள்.

குலதெய்வம் பூர்வீகக் கிராமத்தில், வெளியூரில் என்றிருந்தால், மாதந்தோறும் பெளர்ணமி நாளில், குலதெய்வக் கோயிலுக்குச் செல்வது இயலாததாக இருந்தால், வீட்டில் விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு செய்யலாம். குலசாமி படத்துக்கு மாலையிட்டு, அல்லது பூக்களால் அலங்கரித்து, குலசாமிக்கி சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் முதலான குலதெய்வத்துக்கு படையலிடும் உணவை நைவேத்தியமாகச் செய்து, வேண்டிக்கொள்ளலாம். அக்கம்பக்கத்தினருக்கு வழங்கலாம்.
புரட்டாசி பெளர்ணமி என்றில்லாமல், மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளில் இந்த வழிபாட்டைச் செய்யுங்கள்.

குலதெய்வப் படத்துக்கு முன்னே குடும்ப சகிதமாக நமஸ்கரித்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தையே வளமாக்கித் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x