Last Updated : 11 Sep, 2020 07:03 PM

 

Published : 11 Sep 2020 07:03 PM
Last Updated : 11 Sep 2020 07:03 PM

சனி பகவானுக்கு ராகுகாலத்தில் எள் தீபம்


ராகுகாலத்தில் சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடுங்கள். நவக்கிரகங்களுக்கும் விளக்கேற்றி வழிபடுங்கள். வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும். மகாளயபட்ச காலத்தில், சனிக்கிழமையில் எள் தீபமேற்றுவதும் முன்னோரை வணங்குவதும் காகத்துக்கு உணவிடுவதும் விசேஷ பலன்களைத் தந்தருளும்.
நவக்கிரகங்களில் சனி பகவான் மிக மிக முக்கியமானவர். சனீஸ்வரரை நீதிமான் என் றே புகழ்கிறது புராணம். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்து அவர்களைத் திருத்துவதில் வல்லவர்.

எந்த ஜென்மத்திலோ செய்த பாவங்கள், யாருக்குத் தெரியும் என்று நினைக்கலாம். ஆனால், சனீஸ்வரருக்கு தெரியும். நம்முடைய பாவ புண்ணியங்கள் அனைத்தையும் அறிந்து அதற்கான பலன்களை நமக்குத் தருபவர் அவர்.அதனால்தான் சனி பகவானை ஒருவித பயத்துடனேயே அணுகுகிறார்கள் பக்தர்கள்.

தராசுத் தட்டின் முள்ளைப் போலத்தான் சனீஸ்வரரும். ஆகவே, இதுவரை செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில், நன்மைகளைச் செய்வதும் இனி மனதாலும் பாவங்கள் செய்யாமல் இருப்பதும்தான் சனி பகவானின் அருளைப் பெறுவதற்கான வழி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

எல்லா சிவாலயங்களிலும் நவக்கிரக சந்நிதி அமைந்திருக்கும். நவக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வது சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது. சனிக்கிழமைகளில், ராகு - கேது மற்றும் சனீஸ்வரருக்கு விளக்கேற்றி வழிபடுவது மகத்தான பலன்களைத் தந்தருளும்.

சனிக்கிழமையில் ராகுகாலம் காலை 9 முதல் 10.30 மணி வரை. இந்த நேரத்தில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். அங்கே சிவனாரையும் அம்பாளையும் வணங்கிவிட்டு, பிராகார வலம் வந்து, நவக்கிரக சந்நிதிக்குச் சென்று முறையே பிரார்த்தனை செய்யுங்கள்.

சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, பித்ரு முதலான தோஷங்களைப் போக்கும். சனீஸ்வர பகவானின் கோபப்பார்வையில் இருந்து தப்பலாம். அவரின் அருளைப் பெறலாம். அதேபோல், நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கும் கேது பகவானுக்கும் விளக்கேற்றி வழிபடலாம். நடந்திருக்கும் ராகு - கேது பெயர்ச்சியால் நல்ல நன்மைகளை விளையச் செய்வார்கள் ராகுவும் கேதுவும்!

மகாளயபட்ச புண்ணிய காலம் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், சனிக்கிழமையில் ராகுவையும் கேதுவையும் சனீஸ்வரரையும் வணங்கிப் பிரார்த்திப்பது, வீட்டின் திருஷ்டியைப் போக்கும். இல்லத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும். இதுவரை இருந்த தடைகளையெல்லாம் நீக்கி, வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கு வழிவகைகள் உண்டாகும். காகத்துக்கு உணவிடுவதன் மூலம் சனீஸ்வரரின் அருளையும் முன்னோரின் ஆசியையும் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x