Last Updated : 10 Sep, 2020 06:55 PM

 

Published : 10 Sep 2020 06:55 PM
Last Updated : 10 Sep 2020 06:55 PM

ஏழு அஷ்டமி... பிரிந்த தம்பதியை ஒன்று சேர்க்கும் பைரவ வழிபாடு!

காசியம்பதி என்று போற்றப்படும் காசி மாநகரின் காவல் தெய்வம் இவர்தான். அதுமட்டுமா? எல்லா சிவாலயங்களுக்கும் காவலாக, காவல் தெய்வமாக, காவல்காரனாகத் திகழ்பவர் பைரவர் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

பைரவரின் வாகனம் நாய். இந்த நாய்க்கு ‘சாரமேயன்’ என்று பெயர் இருப்பதாகச் சொல்கிறது புராணம்.பொறுப்பான பதவியோ அந்தஸ்து மிக்க உத்தியோகமோ வேண்டுமென்று தவித்துக் கொண்டிருப்பவர்கள், காலபைரவரிடம் பிரார்த்தித்துக் கொண்டால் நிறைவேற்றித் தருவார்.

தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறதே என்று வருந்துவோர், பொருட்கள் அடிக்கடி களவு போகிறதே என்று குமுறுவோர், குடும்பத்தில் ஆளுக்கொரு திசையில் முகம் திருப்பிக் கொண்டிருக்கிறார்களே என்று புலம்புவோர், தேய்பிறை அஷ்டமியில், பைரவரை வணங்கி வந்தாலே போதும்.

தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியில் பைரவ வழிபாடு செய்து வந்தால் மகத்தான பலன்களைத் தந்தருள்வார். ஏழு அஷ்டமியில் பைரவரை வணங்கி வாருங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். முடிந்தால், மிளகு சாதம் நைவேத்தியம் செய்யலாம்.

அதேபோல், வடை மாலை அல்லது எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். விளக்கேற்றி வழிபடலாம். மேலும் ஆலயத்தில் மட்டுமின்றி, வீட்டிலும் மாலை வேளையில் விளக்கேற்றி, பைரவாஷ்டகம் சொல்லி வழிபட்டு வந்தால், நாய்களால் ஏற்படும் தொல்லைகள் விடுபடும். நாயைக் கல்லால் அடித்த பாவங்கள் மறையும். தொழிலில் லாபம் ஏற்படும். உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு நிச்சயம்.

முதல் வாரமும் ஏழாவது வாரமும் எலுமிச்சை மாலை சார்த்தி பைரவரை வணங்கி பிரார்த்தனை செய்தால், பிரிந்த கணவனும் மனைவியும் ஒன்று சேருவார்கள். தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் நிம்மதி தவழும். பொருளாதாரத் தடைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

சிவனாரின் அம்சம் பைரவர். எனவே ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் திங்கட்கிழமைகளிலும் சிவனாரையும் பைரவரையும் கண்ணாரத் தரிசித்து, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வுக்கும் வளத்துக்கும் துணை நிற்பார் பைரவர்.

இந்த பிரபஞ்சத்தையே ஆட்டி படைக்கும் அளவற்ற சக்தி கொண்டவர் சிவபெருமான்.. அந்த சிவபெருமானின் சக்தியில் கோடியில் ஒரு பங்கால் உருவானவர். காலபைரவரை வணங்குவோர்க்கு இவரால் அடையக்கூடிய நன்மைகள் ஏராளம். மகாசக்தி படைத்தவராயிற்றே!

சிவபெருமான் அசுரர்களை அழிக்க ,அடக்க ,அசுரர்களை எதிர்த்து போரிடும் போது ஏற்ற உருவமே பைரவத் திருக்கோலம். இவர் எதிரிகளை அடக்க ஆயுதம் எடுக்க வேண்டியதில்லை ...ஒரே ஒரு சத்தம் போட்டால் போதும். அதில் பயந்து தெறித்து விடுவார்கள் தீயவர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x