Published : 10 Sep 2015 11:08 AM
Last Updated : 10 Sep 2015 11:08 AM

செல்வ நம்பி திருநட்சத்திர திருவிழா

நான்மாடக்கூடல் என்று சங்க இலக்கியங்களில் பெரிதும் புகழப்படும் மதுரை மாநகரை தலைநகராக கொண்ட பாண்டிய நாட்டை ஆண்ட விக்கிரம பாண்டியன் என்னும் மன்னன், தனக்கு குழந்தை பேறு வேண்டி, அழகரைத் துதித்தான். கனவில் வந்த அழகர் அவனை சேது ஸ்நானம் செய்யப் பணித்தாராம்.

இந்த நிலையில் செல்வ நம்பி என்னும் ஆச்சார்யர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம், பெருங்கருணை என்னும் சிற்றூரில் அவதரித்து சகல சாஸ்திரங்களையும் கற்று தேர்ந்தவராய் இருந்தார். சேது தரிசனத்திற்கு வந்த மன்னன். வழியில் குற்றேவல் குடி என்னும் ஊரில் தங்க, அம்மன்னனுக்கு செல்வ நம்பி  மத் பாகவத புராணத்தை உபதேசம் செய்தார்.

பின்னர் மன்னனுக்குப் பிள்ளைப் பேறு உண்டாயிற்று. இதனால் மகிழ்ந்த மன்னன், அக்குழந்தைக்கு மாறன் வல்லபன் என்று பெயரிட்டான். மேலும் செல்வ நம்பி பிறந்த ஊரில் வரதராஜ பெருமாளுக்கு கோயில் அமைத்தான். செல்வ நம்பியைத் தனது ராஜபுரோகிதராகக் கொண்டான். வல்லபனுக்கு உரிய காலத்தில் மன்னனனாக முடி சூட்டப்பட்டது.

வல்லபனுக்கு, மோட்சத்தை வழங்க வல்ல பர தெய்வம் யார் என்ற சந்தேகம் எழுந்தது. தனது சந்தேகத்தைத் தீர்க்குமாறு செல்வ நம்பியிடம் வேண்டினான். இப்பெரியவர், பரந்துபட்ட தனது அறிவையும், தேசத்தில் தனக்கிருந்த செல்வாக்கையும் கொண்டு, “மந் நாரயணனே” அந்த பரதெய்வம் என்று நிர்ணயம் செய்திருக்கலாம். ஆயினும் சமண, பவுத்த, சைவ, சாக்த உள்ளிட்ட மதங்களில் கரை கண்ட பண்டிதர்களை அழைத்து வேத சாஸ்திரபூர்வமான விவாதம் நடத்தி சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ளுமாறு அரசனுக்கு யோசனை தெரிவித்தார்.

அதன்படி விவாத அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. முடிவு காண முடியாதபடி இந்த விவாதம் மாதக்கணக்காக நீண்டுகொண்டே போனது. இதனிடையே செல்வ நம்பி, தகுந்த சத்பாத்திரத்தைக் கொண்டு தானே தன்னை நிரூபித்துக்கொள்ளுமாறு வில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ள வடபெருங்க கோயிலுடையானின் திருவடி தொழுது நின்றார்.

இதனையடுத்து தமக்கு புஷ்பக் கைங்கரியம் செய்வதல்லாது வேறோன்றும் அறியாத விஷ்ணுசித்தர் என்ற எளிய மனிதரை “ மந் நாராயணனான தாமே அந்த பரதெய்வம்” என்று நிரூபித்து வருமாறு நியமித்தாராம். இதன் பின் நடந்த நிகழ்வுகளே  விஷ்ணு சித்தரை “பெரியாழ்வாராக” அடையாளப்படுத்தியது என்பர்.

செல்வ நம்பி அவதரித்தது, பரமகுடிக்கு அருகில் உள்ள பெருங்கருணை என்ற ஊர். இவர் சந்நிதி கொண்டிருக்கும்  பூமி நீளா பெருந்தேவி கோதா நாயிகா சமேத  பெருங்கருணை வரதராஜப் பெருமாள் திருக்கோயில் தற்போது மிகவும் பாழடைந்து உள்ளதால், புனரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. செல்வ நம்பி அவதரித்த தினமான ஆவணி பூச நட்சத்திரத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு செப்டம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில், இத்திருக்கோயிலில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x