Last Updated : 27 Aug, 2020 07:08 PM

 

Published : 27 Aug 2020 07:08 PM
Last Updated : 27 Aug 2020 07:08 PM

சாயிபாபா நோய் தீர்ப்பார்; லாபம் தருவார்; கல்வியைத் தருவார்!  மருந்து, மாத்திரை; வியாபாரக் கணக்கு; குழந்தைகளின் பேனா, நோட்டு!

ஷீர்டி என்பது மகான் நடந்து நின்று அமர்ந்து அருள் வழங்கிய திருத்தலம். சாயிபாபா தன்னுடைய பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய புண்ணிய பூமி.

இங்கு உள்ள ஒவ்வொரு இடமும் தரிசித்து வணங்க வேண்டிய இடங்களே. இங்கு உள்ள ஒவ்வொரு பிடிமண்ணும் பாபாவின் திருவடி பட்டு இன்றைக்கும் நல்ல நல்ல அதிர்வுகளைக் கொண்டிருக்கிறது. ஷீர்டி திருத்தலத்தில் இருந்துகொண்டுதான், தன்னுடைய மொத்த அருளாடல்களையும் செய்து, மக்களை உய்வித்து அருளினார்.
ஷீர்டியில் பாபாவின் சமாதி மந்திர், அவர் வசித்த துவாரகாமயி, குருஸ்தான், லெண்டித் தோட்டம், மகல்சாபதி இல்லம் என்று பல இடங்களை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இங்கே, இந்த இடங்களிலெல்லாம் பாபாவிடம் இருந்து வரும் அதிர்வுகளை, உண்மையான பக்தர்களால் உணர்ந்துகொள்ளமுடியும். அப்படி உணர்ந்தவர்கள், மெய்சிலிர்த்து ‘சாயிராம் சாயிராம்’ என்று சாயி பகவானின் திருநாமத்தை உச்சரித்தபடி, வலம் வருகிறார்கள்.

இங்கே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு துகள் மண்ணிலும் சாயி பகவானின் அருள் வியாபித்திருக்கிறது. சமாதி மந்திர், துவாரகமாயி, சாவடி, குருஸ்தான், லெண்டித் தோட்டம், மகல்சபாதி இல்லம் எனப் பல இடங்கள் பக்கதர்களால் சிலிர்ப்புடனும் வியப்புடனும் தரிசித்து வருகிறார்கள்.

துவாரகாமாயியை அடுத்து உள்ளது சாவடி. சுமார் 50 அடி தூரத்தில் உள்ளது இது. சாவடி என்றால் மக்கள் கூடிப் பேசும் பொது இடம். அந்தக் காலத்தில், வெளியூரில் இருந்து வரும் பயணிகள் தங்கிச் செல்லும் இடம் இது என்கிறார்கள் ஷீர்டிக்குச் சென்று வந்த பக்தர்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்கும் அந்த இடம் மொத்தமும் பாபாவின் முழுப் பேரருள் நிரம்பியிருக்கிறது என்று இன்றைய காலகட்டத்தில் ஷீர்டிக்குச் சென்று வந்த பக்தர்கள், வியந்தும் மகிழ்ந்துமாக விவரிக்கிறார்கள். இன்றைக்கு பளிங்கு மாளிகையாகத் திகழ்கிறது.

தீராத நோயுடன் இருப்பவர்கள், பாபாவின் திருமுகத்துக்கு முன்னே மனமுருகி வேண்டிக்கொண்டால் போதும். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பாபா கோயிலில் அல்லது வீட்டுப் பூஜையறையில் உள்ள சாயிபாபா படத்துக்கு முன்னே விளக்கேற்றி, நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை பாபாவிடம் வைத்து வேண்டிக்கொள்ளுங்கள். வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்தவர்கள், பாபாவின் படத்துக்கு முன்னே, உங்கள் வியாபாரம் சம்பந்தப்பட்ட பொருட்களை அல்லது கணக்கு நோட்டுகளை அவர் திருப்பாதத்துக்கு அருகில் வையுங்கள். மனதார வழிபடுங்கள்.

உங்கள் வீட்டுக் குழந்தைகளின் நோட்டு, புத்தகங்களை பாபாவின் திருவடியில் வைத்து குழந்தைகளை வேண்டிக்கொள்ளச் சொல்லுங்கள். தீராத நோயும் தீரும். வியாபாரத்தில் இருந்த நஷ்ட நிலையும் கஷ்ட நிலையும் அடியோடு மாறும். அபரிமிதமான லாபத்தைச் சந்திப்பீர்கள். குழந்தைகள், கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள்.

பாபா எங்கும் நிறைந்திருக்கிறார். நீக்கமற நிறைந்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x