Last Updated : 25 Aug, 2020 09:32 AM

 

Published : 25 Aug 2020 09:32 AM
Last Updated : 25 Aug 2020 09:32 AM

மாங்கல்யம் காப்பாள்; திருஷ்டியை நீக்குவாள் துர்காதேவி! 

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபடுங்கள். மங்கல வாழ்வு தருவாள். மங்காத செல்வங்களைத் தந்திடுவாள். பெண்களின் கண்ணீரையும் ஆண்களின் துக்கத்தையும் துடைத்தெறிவாள். வீட்டைச் சுற்றியுள்ள திருஷ்டியையும் நீக்கிடுவாள். சகல செளபாக்கியங்களுடனும் மாங்கல்ய பலத்துடனும் வாழவைப்பாள் துர்காதேவி.

தேவியின் பல அவதாரங்களில் துர்கையும் ஒன்று. கடும் உக்கிரமும் அதேசமயம் கருணையும் கொண்டதாகத் திகழ்பவள் துர்கை என்கிறது புராணம். சிவாலயங்களிலும் பெருமாள் கோயில்களிலும் துர்கைக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டு, அங்கே சாந்நித்தியமும் சக்தியும் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சிவாலயத்தில் உள்ள துர்கைக்கு சிவ துர்கை என்றும் பெருமாள் கோயிலில் உள்ள துர்கைக்கு விஷ்ணு துர்கை என்றும் பெயர் அமைத்து வழிபடப்படுகிறது.

ஆலயத்தில், கோஷ்டத்தில் பிராகாரமாக வலம் வந்து துர்கையை வழிபடவேண்டும். துர்கை எப்போதுமே ஆக்ரோஷ நாயகிதான். அதேசமயம், தீயவர்களிடம் மட்டுமே தன் கோபத்தைக் காட்டுவாள். தன்னைச் சரணடைவோருக்கு எப்போதும் அரணனாகத் திகழ்வாள்.

தேவர்களையும் ரிஷிகள் பெருமக்களையும் அழிப்பதற்காக, ஆயிரம் அக்ரோணி சேனைகளுடன் பலம் பொருந்திய தளபதிகளுடன் படையெடுத்தான் துர்கமன் எனும் அரக்கன். இதைக் கண்டு கதறிக் கலங்கினார்கள் தேவர்கள். தவித்து மருகியவர்கள் அம்பிகையை, பராசக்தியை சரணடைந்தார்கள்.

தேவர்களையும் ரிஷிகளையும் ஓரிடத்தில் வைத்து, அவர்களைச் சுற்றி அக்னி மண்டலத்தை உருவாக்கினாள். அவர்களைப் பாதுகாத்தாள்.

அடுத்து, துர்கமனை அழிக்கப் புறப்பட்டாள் தேவி. ஐந்து பாணங்கள் புறப்பட்டுத் துளைக்கும் அம்பை எய்தினாள். அவனுடைய உடலிலிருந்து பஞ்சப் பிராணனும் வெளியே வந்தது. செத்தொழிந்தான் துர்கமாசுரன்.

அவன் உடலிலிருந்து வந்த மந்திரங்கள் பேரொளியாக தகதகத்தன. அவை லோகநாயகியான பராசக்தியினுள்ளே பிரவேசித்தன. இதனால் அம்பாளுக்கு சர்வ மந்திரமயீ எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

துர்கம் என்றால் கோட்டை என்று அர்த்தம். துர்கை என்றால் கோட்டையின் நாயகி என்று அர்த்தம். துர்கமன் எனும் அசுரனை அழித்த்து, துக்கங்களையெல்லாம் போக்கியவள் என்பதால், அம்பிகைக்கு துர்கை எனும் திருநாமம் அமைந்ததாக விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

துர்கையை வழிபடுவதும் அவளின் ஸ்லோகத்தைச் சொல்லி அவளை ஆராதிப்பதும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. எதிர்ப்புகளையெல்லாம் அடக்கவல்லவை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஓம் ஜதா ஜூத் சம்யுக்தமருதேன்னு க்ரித் லக்ஷ்மன்
லோகாயந்த்ரா சந்யுக்தம் பட்மெண்டு சத்ய ஷான்நாம்

எனும் துர்காதேவியின் ஸ்லோகத்தைச் சொல்லி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபடுங்கள். மங்கல வாழ்வு தருவாள். மங்காத செல்வங்களைத் தந்திடுவாள். பெண்களின் கண்ணீரையும் ஆண்களின் துக்கத்தையும் துடைத்தெறிவாள். வீட்டைச் சுற்றியுள்ள திருஷ்டியையும் நீக்கிடுவாள். சகல செளபாக்கியங்களுடனும் மாங்கல்ய பலத்துடனும் வாழவைப்பாள் துர்காதேவி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x