Last Updated : 21 Aug, 2020 05:57 PM

 

Published : 21 Aug 2020 05:57 PM
Last Updated : 21 Aug 2020 05:57 PM

கடன் பிரச்சினை விலகும்; தீராத நோயும் தீரும்; விநாயக சதுர்த்தியும் வாஸ்துநாளும் இணைந்தநாளில் எளிமையான வழிபாடு! 

நாம் வசிக்கும் வீடு என்பது, அது சொந்தவீடாக இருந்தாலும் சரி... வாடகை வீடாக இருந்தாலும் சரி... வாஸ்து அமைப்பின்படி கட்டமைத்திருப்பது முக்கியம் என மனையடி சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

‘என்னவோ தெரியலீங்க. அந்த வீட்லேருந்து இந்த வீட்டுக்கு குடிமாறி வந்ததுலேருந்து படுத்தியெடுக்குது. எவ்ளோ சம்பாதிச்சாலும் காசே தங்கமாட்டேங்கிது’ என்று பலரும் புலம்புவார்கள், நாமே கூட புலம்பியிருப்போம்.

அதேபோல், ‘இந்த வீடு எங்களுக்கு ராசியான வீடு. தண்ணிப்பிரச்சினை, வாடகை அதிகம், வேலைக்குப் போற இடம் தூரம்னு இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டிருக்கோம். இங்கே வந்ததுலேருந்துதான் நாலு காசு சேக்க முடியுது. எப்ப பாத்தாலும் ஆஸ்பத்திரி, மருந்து, மாத்திரைன்னே இருந்த நிலையெல்லாம் இந்த வீட்டுக்கு வந்ததிலேருந்து மாறிருச்சு. பசங்க படிப்புல மந்தமா இருந்தாங்க. இப்போ நல்லாப் படிக்கிறாங்க. முன்னாடிலாம் எங்க வீட்டுக்காரரு, எதுக்கு எடுத்தாலும் எரிஞ்சு விழுந்துக்கிட்டே இருப்பாரு. இப்ப டென்ஷன் இல்லாம நிம்மதியா இருக்கோம்’ என்று சொல்லி மகிழ்வார்கள்; நெகிழ்வார்கள்.

சொந்த வீடோ, வாடகை வீடோ... எதுவாக இருந்தாலும் அங்கே வீடானது வாஸ்துப்படி இருக்கவேண்டும். வாஸ்துப்படி இருக்கிற ஜன்னலும் கதவும் ஷெல்ஃப்புகளும், நம்முடைய குணாதிசயங்களை, கேரக்டர்களை, எதிர்மறை நேர்மறை சிந்தனைகளை அசைத்து சரிசெய்யும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.

‘வாஸ்துப்படி இப்படி இருக்கணும். அப்படி மாத்துங்க’ என்று சொன்னால், வாடகை வீடாக இருந்தால் செய்யவே முடியாது. சொந்த வீடாக இருந்தால், அதுவொரு செலவு. ஆனால், வாஸ்துவுக்கு உரிய நாளில், உரிய வழிபாடுகளைச் செய்து வழிபட்டால், வாஸ்து பகவானின் அருளை வீட்டுக்குள் கொண்டுவரலாம் என்பது உறுதி.

நாளையதினம் 22.8.2020 சனிக்கிழமை, வாஸ்து நாள். இந்த நாளில், விநாயக சதுர்த்தி எனும் அற்புதநாளும் இணைந்திருக்கிறது. நாளைய வாஸ்து நேரம்... காலை 7.23 முதல் 7.59 மணி வரை. எனவே நாளைய நன்னாளில், விநாயகப் பெருமானுக்கு ஒருபக்கம் பூஜை செய்யும் அதேவேளையில், இந்த நேரத்தில், வாஸ்து பகவானையும் உங்கள் குலதெய்வத்தையும் மனதார வழிபடுங்கள். முன்னதாக, வீட்டுப் பூஜையறை, சமையலறை முதலான இடங்களைச் சுத்தமாக வைத்திருங்கள். சமையல் மேடையை அலம்பி, கோலமிடுங்கள்.

பூஜையறையின் மேடையில் படிந்திருக்கும் எண்ணெய்ப்பிசுக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி சாம்பல் தூசு, சுவாமி படங்களின் ஓரங்களில் ஆடிக்கொண்டிருக்கும் ஒட்டடை முதலானவற்றையெல்லாம் சுத்தம் செய்யுங்கள்.

காலையில் எழுந்ததும் வீட்டு வாசலில், மாவிலையைத் தோரணமாகக் கட்டுங்கள்.

இன்று வாஸ்து பூஜைக்கு உரிய நேரம் காலை 7.23 முதல் 7.59 மணி வரை.

எனவே அந்த சமயத்தில், வீட்டு பூஜையறையில் கோலமிட்டு விளக்கேற்றுங்கள். சுவாமிப் படங்களுக்கு, விக்கிரகங்களுக்கு சந்தனக் குங்குமம் இடுங்கள். அந்தந்த தெய்வங்களுக்கு உரிய மலர்களைச் சூட்டுங்கள்.

குறிப்பிட்ட இந்த நேரத்துக்குள், வாயு மூலை, அக்னி மூலை, நிருதி மூலை என வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் சாம்பிராணிப் புகையை இடுங்கள். பிறகு கற்பூரம் ஏற்றி, சமையலறைப் பகுதி, அரிசி முதலானவை வைத்திருக்கும் அடுக்குப் பாத்திர, வாளிகள், பீரோ, குழந்தைகள் புத்தகங்கள் கொண்ட ஷெல்ஃப், அலமாரி, வீட்டு நிலைவாசல் முதலான இடங்களில் தீபம் காட்டி வேண்டுங்கள்.

சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு வழங்குங்கள். பாயசம் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு.

இதேபோல், மாலை வேளையில், வீட்டுப் பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றுங்கள். குடும்பத்தார் அனைவரையும் நடுஹாலில் கிழக்குப் பார்த்தபடி அமரவைத்து, எலுமிச்சை, தேங்காய், பூசணியால் திருஷ்டி கழியுங்கள். பிறகு தெருமுனையில் அவற்றை போட்டுவிடுங்கள். எலுமிச்சையை நறுக்கி, நாலாதிசைக்கும் வீசுங்கள். தேங்காயையும் பூசணியையும் சிதறுகாய் போல் தெருமுனையில், முச்சந்தியில் உடைக்கலாம்.

வீட்டின் திருஷ்டி அனைத்தும் விலகிவிடும். வீட்டில் இதுவரை குடிகொண்டிருந்த தரித்திரம் அகலும். சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும். நோய்களெல்லாம் நீங்கும். ஆரோக்கியம் கூடும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். கடன் தொல்லையில் இருந்து சுபிட்ச நிலைக்கு உங்கள் வீடு மாறும் என்பது உறுதி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x