Last Updated : 21 Aug, 2020 03:27 PM

 

Published : 21 Aug 2020 03:27 PM
Last Updated : 21 Aug 2020 03:27 PM

பிள்ளையாருக்கு அருகம்புல் - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்

மற்ற தெய்வங்களுக்கு ஒவ்வொரு விதமான பூக்களைக் கொண்டு அர்ச்சிக்கவேண்டும். சுவாமியை அலங்கரிக்க வேண்டும். ஆனால் பிள்ளையாருக்கு வயல்வெளியிலும் ஆற்றோரங்களிலும் வளருகிற அருகம்புல்லே போதுமானது. ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் எளிமையாய் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு, இப்படி எளிமையான அருகம்புல்லைக் கொண்டு மாலையாக அணிவித்தாலே மகிழ்ந்து அருளுவார் விநாயகப் பெருமான்.

விநாயகருக்கு அருகம்புல் சார்த்துவது ரொம்பவே விசேஷம். இதுகுறித்து புராணம் சொல்லும் விளக்கத்தைப் பார்ப்போமா.
யமதருமனுடைய மகன் அனலன். அவன் அபூர்வமான வரத்தைப் பெற்றிருந்தான். அதாவது அனல் வடிவம் கொண்டவன் அவன். எவருக்கும் தெரியாமல் இருக்கும் வரத்தைப் பெற்றிருந்தான்.அதன்படி, ஒவ்வொருவருடைய உடலிலும் புகுந்து, அவரவரை உருக்கி உருக்குலைப்பதே அனலனின் வேலை.

இந்த அனலில், செய்வதறியாது திகைத்துப்போனார்கள் மனிதர்கள். கொஞ்சம் கொஞ்சமாக அனலில் சிக்கிய புழுவென அனலில் உருகிப் போனார்கள். இப்படிச் சிக்கித்தவித்தவர்களில், தேவர்களும் முனிவர்களும் விதிவிலக்கில்லை.
கலங்கித் தவித்தவர்கள், விநாயகப் பெருமானை வணங்கி தவமிருந்தார்கள். அவர்களுக்குக் காட்சி தந்த கணபதி பெருமான், ’கலக்கம் வேண்டாம்’ என அருளினார். தன் துதிக்கை கொண்டு அனலனை வளைத்தார். பிடித்தார். அப்படியே துதிக்கையால் விழுங்கினார்.

இந்த உலகையே தன் பெருவயிற்றில் கொண்டவர் விநாயகர். மூவுலகையும் காத்தருளக்கூடிய விநாயகரின் கனத்த வயிறு அனலால் தகித்தது. பாலை குடம் குடமாக விநாயகருக்கு அபிஷேகித்தார்கள். சந்திர பகவான், தன் குளிர்ந்த ஒளிக்கரங்களைச் சாற்றினான். எப்போதும் குளிர்ந்த உடலுடன் சர்ப்பங்களை விநாயகருக்கு மாலையாக இடுப்பில் அணிகலன் போலவும் சாற்றினார்கள். ஆனாலும் விநாயகர் குளிர்ந்தபாடில்லை.

அப்போது சப்தரிஷிகள், 21 அருகம்புல்லை எடுத்துக் கொண்டார்கள். விநாயகப் பெருமானை மனமுருகப் பிரார்த்தித்தார்கள். அந்த அருகம்புல்லை விநாயகரின் திருமேனியில் சாற்றி அலங்கரித்தார்கள். விநாயகர் அருகம்புல்லால் குளிர்ந்துபோனார். மூவுலகத்து உயிர்களும் குளிர்ந்தன என்கிறது புராணம்.

அதனால்தான், பிள்ளையாருக்கு அருகம்புல் சார்த்தி வழிபடுகிறோம்.

நாளைய தினம் (22.8.2020) விநாயக சதுர்த்தி. இந்த நன்னாளில், விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி வழிபடுவோம். ஆல் போல் தழைத்து அருகு போல் நம் வாழ்க்கையைச் செழிக்கச் செய்து அருளுவார் பிள்ளையாரப்பா. வாழ்வில் வளமும் நலமும் தந்தருள்வார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x