Last Updated : 17 Aug, 2020 04:35 PM

 

Published : 17 Aug 2020 04:35 PM
Last Updated : 17 Aug 2020 04:35 PM

நாலுபேருக்கு தயிர்சாதம் தரலாமா நீங்கள்? ஆவணி அமாவாசையில் முன்னோர் வழிபாடு

ஆவணி மாத அமாவாசையில், உங்களின் முன்னோரை நினைத்து அவர்களுக்கு பூஜை செய்யுங்கள். நான்குபேருக்கேனும் தயிர்சாதம் பொட்டலம் வழங்குங்களேன். உங்களையும் உங்கள் சந்ததியையும் முன்னோர்கள் இனிதே வாழ ஆசீர்வதிப்பார்கள். பித்ருக்களின் அருளாலும் ஆசியாலும் கடாட்ஷமாக வாழ்வீர்கள்.

நம் முன்னோர்களை பித்ருக்கள் என்று சொல்லுவோம். வழிபாடுகளில், நம் முன்னோர்களையும் பித்ருக்களையும் தவறாமல் வணங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது சாஸ்திரம். வீட்டில், எந்த விசேஷங்கள் நடந்தாலும் அந்தக் காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, முன்னோர்களையும் குலதெய்வத்தையும் பூஜை செய்யவேண்டும்.

வீட்டில் உள்ள நம் முன்னோர்களின் படங்களுக்கு ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் மறக்காமல் தீப தூப ஆராதனை காட்டவேண்டும். அவர்களை நமஸ்கரித்து நம்முடைய கோரிக்கைகளை வேண்டிக்கொள்ளவேண்டும். முக்கியமாக மாதந்தோறும் அமாவாசை தினத்தில், முன்னோர் ஆராதனையை செவ்வனே செய்யவேண்டும்.

ஒவ்வொரு மாதத்தின் அமாவாசையிலும் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகிறது சாஸ்திரம். அமாவாசை என்பது பித்ருக்களுக்கு உரிய நாள். அவர்களை வழிபடுவதற்கு உரிய நாள். அந்தநாளில், எள்ளும் தண்ணீரும் கொண்டு, தர்ப்பணம் செய்யவேண்டும். அரிசி, வாழைக்காய், வெற்றிலை, பாக்குடன் நம்மால் முடிந்த தட்சணையை வழங்கி, நமஸ்கரிக்க வேண்டும்.

ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் உள்ளன என்று விவரித்துள்ளது சாஸ்திரம். அதாவது முன்னோரை நினைத்து 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் பிறப்பு, கிரகண காலம், மகாளய பட்சத்தின் காலமான பதினைந்து நாட்கள், வருஷ திவச நாள் என்பது உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன.
நாளைய தினம் 18.8.2020 செவ்வாய்க்கிழமை, அமாவாசை. ஆவணி மாத அமாவாசை. இந்த நாளில், மறக்காமல் முன்னோர் வழிபாடு செய்யுங்கள். எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யுங்கள்.

பச்சரிசி, வாழைக்காய், வெற்றிலை, பாக்குடன் நம்மால் முடிந்த தட்சணையை ஆச்சார்யருக்கு அளித்து நமஸ்கரித்து வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் உள்ள நம் முன்னோர்களின் படங்களுக்கு, பூக்களால் அலங்கரித்து, தீப தூப ஆராதனைகள் செய்யுங்கள். சந்தனம் குங்குமம் இடுங்கள்.

முன்னோரை நினைத்து, தினமும் காகத்துக்கு உணவிடுவது நம் குலத்தையும் வம்சத்தையும் வாழச் செய்யும். தழைக்கச் செய்யும். வாழையடி வாழையென வளரச் செய்யும். குறிப்பாக, அமாவாசை முதலான பித்ருக்களுக்கு உரிய நாட்களில், அவசியம் காகத்துக்கு உணவிடவேண்டும். ஆகவே, காகத்துக்கு உணவிடுங்கள்.

இந்த நாளில், நம் முன்னோரை நினைத்துச் செய்கிற காரியங்கள் அனைத்துமே, அவர்களைப் போய்ச்சேரும் என்றும் அதில் குளிர்ந்து முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்றும் விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஆகவே, நாளைய ஆவணி அமாவாசை தினத்தில், முன்னோரை நினைத்து நான்கு பேருக்கேனும் தயிர்சாதம் வழங்குங்கள். முன்னோரின் ஆசியைப் பெறுங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x