Last Updated : 11 Aug, 2020 04:40 PM

 

Published : 11 Aug 2020 04:40 PM
Last Updated : 11 Aug 2020 04:40 PM

ஆடி கிருத்திகையில்... ஆன்லைனில் அழகன் முருகனின் நேரலை தரிசனம்; வரம் தரும் வடபழநி முருகனை தரிசியுங்கள்! 

ஆடிக்கிருத்திகையில் ஆன்லைனில் அழகன் முருகனின் அபிஷேக ஆராதனையை, நேரலையில் வீட்டிலிருந்தபடியே தரிசியுங்கள். வரங்கள் அனைத்தும் தரும் வடபழநி முருகப் பெருமானின் ஆடிக் கிருத்திகை பூஜையை, இல்லத்தில் இருந்தே தரிசித்துச் சிலிர்க்க, ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சிவபெருமானின் அருளால் ஆடி கிருத்திகை தினத்தில் சூரனை அழிக்க முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தார். அந்தக் குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்தனர்.
கார்த்திகைப் பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் கார்த்திகை நட்சத்திரமாக மாறினார்கள். முருகக் கடவுளை ஆராதித்தவர்களுக்கு நட்சத்திரப் பட்டம் கிடைத்தது. அதுமட்டுமின்றி, கிருத்திகை நட்சத்திர நாளில், முருகப் பெருமானை வழிபடும் வழக்கமும் ஏற்பட்டது என விவரிக்கின்றன ஞானநூல்கள்.

இதன் காரணமாகத்தான், முருகக் கடவுளுக்கு 'ஆறு எண்' என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆறுமுகங்களைக் கொண்டிருக்கிறான் அழகுக் குமரன். அப்பன் சிவனாரின் மந்திரம் ஐந்தெழுந்து நமசிவாயம் எனில், மால் மருகனின் மந்திரம் ஆறெழுத்து ‘சரவணபவ’. ஆறுமுகத்துடன் ஆறிரு கரங்கள் என்றும் காட்சி தருகிறான் கந்தவடிவேலன்.

சூரனை அழித்து, தேவர்களைக் காத்த ஆறுமுகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. மூன்று கிருத்திகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தை கிருத்திகை விசேஷம். அதேபோல், கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரமும் சிறப்பு வாய்ந்தது. இதேபோல, ஆடி மாதத்தில் வருகிற கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

பொதுவாகவே, ஆடிக் கிருத்திகை தினத்தன்று அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படும். இந்தநாளில், விரதம் இருந்து முருக தரிசனம் மேற்கொள்வார்கள் பக்தர்கள்.

சென்னை வடபழநி அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஆடி கிருத்திகையை முன்னிட்டு, வடபழநி ஆண்டவர் உற்ஸசவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நாளைய தினம் 12.8.2020 ஆடிக்கிருத்திகை நன்னாள். வழக்கம்போலவே வடபழநி ஆண்டவர் கோயிலில் உள்ள உத்ஸவ மூர்த்தத்திற்கு விசேஷ அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறுகிறது. இதனை, ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது ஆலய நிர்வாகம். .

பக்தர்கள் https://www.youtube.com/channel/UCntBdqxaQ9v9Qr7saUmXq0g என்ற YouTube channel மூலம், 12.08.2020 புதன்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நேரலை ஒளிபரப்பு மூலம் தரிசித்து, அருள்மிகு வடபழநி ஆண்டவரின் அருளைப் பெறுங்கள்.

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும், இந்தத் தகவலினை தங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அனைவரும் ஆடி கிருத்திகை வழிபாட்டினை நேரலையில் கண்டு, வடபழநி முருகப் பெருமானின் அருளைப் பெறுங்கள் என திருக்கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x