Last Updated : 10 Aug, 2020 10:20 PM

 

Published : 10 Aug 2020 10:20 PM
Last Updated : 10 Aug 2020 10:20 PM

கோகுலாஷ்டமியில்... சகல ஐஸ்வரியம் தரும் கிருஷ்ணாஷ்டகம்! 

பகவான் கிருஷ்ணரை பூஜித்துப் போற்றும் கோகுலாஷ்டமி. கீதையின் நாயகனைக் கொண்டாடி வணங்கும் நன்னாள்.
புல்லாங்குழலோன் உதித்து, குழலின் இசையால் ஆவினங்களையும் நம்மையும் குளிர்வித்த புண்ணியத் திருநாள். இந்தநாளில், இல்லத்தில் கிருஷ்ணர் பாதம் வரைந்து, கிருஷ்ணரை வணங்குவோம். கண்ணனுக்குப் பிடித்த சீடை, அதிரசம், அவல் பாயசமெல்லாம் செய்து கண்ணனை அழைத்து ஆராதிப்போம்.

குழந்தை இல்லாத வீட்டில், கோகுலாஷ்டமி பூஜையைச் செய்தால், குழந்தையாக கிருஷ்ணனே வந்து பிறப்பான் என்பது ஐதீகம். குசேலருக்கு உதவியது போல் நமக்கும் அருள் மழை பொழிவான். சகல ஐஸ்வர்யமும் தந்து வாழச் செய்வான்.

முக்கியமாக... இந்த நன்னாளில், கோகுலாஷ்டமியில், கிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்யுங்கள். தெய்வ கடாக்ஷம் இல்லத்தில் ஒளிரும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் இனிதே நடந்தேறும்.

அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டகம் என்றால் எட்டு ஸ்லோகத்தால் ஆனவை. கிருஷ்ணன் குறித்த எட்டு ஸ்லோகங்கள், கிருஷ்ணாஷ்டகம் எனப்படும். இப்படியாக எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அஷ்டகத்தை பாராயணம் செய்து, கிருஷ்ண பகவானை வணங்குவது மிகுந்த பலன்களைத் தரும்.

'நம் வாழ்வில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நல்ல நல்ல பலன்கள் அனைத்தையும் எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்' என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதன் கடைசி ஸ்லோகம் இதையே வலியுறுத்துகிறது.
கோகுலாஷ்டமியில், தமிழ்ப் பொருளோடு இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!

கிருஷ்ணாஷ்டகம்

வசுதேவ ஸூதம் தேவம்

கம்ஸ சாணூர மர்த்தனம்

தேவகீ பரமானந்தம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: வசுதேவரின் குமாரன்... கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன். தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாகத் திகழ்பவன். சகல லோகத்துக்கும் குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

அதஸீ புஷ்ப ஸங்காசம்

ஹாரநூபுர சோபிதம்

ரத்ன கங்கண கேயூரம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன். மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன். ரத்தினம் இழைத்த கையில் அணியும் அணிகலன்களை தோள்களில் அணிந்தவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

குடிலாலக ஸம்யுக்தம்

பூர்ண சந்த்ர நிபானனம்

விலஸத் குண்டல தரம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன். முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன். பளீர் என ஒளிருகிற குண்டலங்கள் அணிந்தவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

மந்தார கந்த ஸம்யுக்தம்

சாருஹாஸம் சதுர்ப்புஜம்

பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் திகழ்பவன். அழகான புன்னகையைத் தவழவிடுபவன். நான்கு திருக்கரங்களை உடையவன். மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்... உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

உத்புல்ல பத்ம பத்ராக்ஷம்

நீல ஜீமூத ஸந்நிபம்

யாதவானாம் சிரோ ரத்னம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள் : மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்... தாமரைக் கண்ணன். நீருண்ட மேகத்தைப் போன்றவன். யாதவர்களின் ரத்தினமாகவும் முடிசூடா மன்னனாகவும் திகழ்பவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணரை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம்

பீதாம்பர ஸூசோபிதம்

அவாப்த துளசீ கந்தம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன். பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன். துளசியின் பரிமளத்தைக் கொண்டிருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

கோபிகாநாம் குசத்வந்த்வ

குங்குமாங்கித வக்ஷஸம்

ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பின் அடையாளத்தை மார்பில் கொண்டவன். ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடம் தந்தவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.

ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம்

வநமாலா விராஜிதம்

சங்க சக்ரதரம் தேவம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: ஸ்ரீவத்ஸம் எனும் மருவை அடையாளமாகக் கொண்டவன். அகன்ற மார்பை உடையவன். வனமாலையைச் சூடிக் கொண்டிருப்பவன். சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.

க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம்

ப்ராதருத்தாய ய படேத்

கோடி ஜந்ம க்ருதம் பாபம்

ஸ்மரணேன விநச்யதி

பொருள்: எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு ஸ்லோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் பாராயணம் செய்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். வீடு மனை யோகம் கிடைத்து, குறும்புக் கண்ணனைப் போல் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x