

நம் மனதையும் நம் எண்ணங்களையும் தீர்மானித்து அதன்படி இயக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பவன் சந்திரன். அதனால்தான் சந்திரனை மனோகாரகன் என்கிறோம். நம் மனதின் எண்ணங்களுக்கு சந்திரனே காரணம்.
நவக்கிரகங்களில் சந்திர பகவானும் முக்கியமானவர் .சந்திரனுக்கு திங்கள் என்றும் பெயர் உண்டு. இந்த சந்திரனையே தன் சிரசில் பிறையென சூடிக்கொண்டிருக்கிறார் சிவபெருமான். அதனால்தான் சோம வாரம் என்று திங்கட்கிழமையைச் சொல்வார்கள்.
மனோகாரகன் சந்திரனுக்கு தனிக்கோயிலே உள்ளது. தஞ்சாவூர் திருவையாறுக்கு அருகில் திங்களூர் என்ற திருத்தலம் உள்ளது. நவக்கிரகங்களில் இந்தத் தலமும் ஒன்று.
திங்கட்கிழமைகளில் காலையும் மாலையும் சந்திர பகவானுக்கு உரிய காயத்ரியைச் சொல்லி சந்திர பகவானை வழிபடுங்கள்.
நவக்கிரக சந்திர பகவான் காயத்ரி இதோ :
ஓம் பகவத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ ஸோம ப்ரசோதயாத்
அதாவது, குறைகளையெல்லாம் தீர்த்தருளும் திங்களே! தாமரை மலரைத் தாங்கியபடி தரணியெங்கும் தண்ணொளி கொடுப்பவனே. தாழ்வில்லாத மனம் தரும் மதியே... உனக்கு நமஸ்காரம். எங்கள் எண்ணங்களை செம்மைப்படுத்துவாயாக!
இந்த சந்திர பகவான் காயத்ரியை, மனமொன்றி சொல்லுங்கள். 24 முறையோ 54 முறையோ 108 முறையோ சொல்லி வழிபடுங்கள். காலையும் மாலையும் சொல்லுங்கள்.
உங்கள் மனதை செம்மைப்படுத்துவார் சந்திர பகவான். எண்ணங்களை நேராக்குவார். மனதில் உள்ள குழப்பங்களையெல்லாம் போக்கியருள்வார்.