Last Updated : 07 Aug, 2020 09:37 AM

 

Published : 07 Aug 2020 09:37 AM
Last Updated : 07 Aug 2020 09:37 AM

சுக்கிர யோகம் தரும் சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி இன்று! 

சங்கடஹர சதுர்த்தி நாளில், ஆனைமுகத்தானை வழிபடுவோம். நமக்கு சந்தோஷங்களையும் வெற்றிகளையும் தந்தருள்வார் பிள்ளையாரப்பன். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையான இன்று சங்கடஹர சதுர்த்தி. சுக்கிர யோகத்தைத் தந்தருள்வார் கணபதி.

சிவபெருமானுக்கு மாதந்தோறும் சிவராத்திரி வரும். பெருமாளுக்கு மாதத்தில் ஏகாதசி உண்டு. ஆண்டாளுக்கு பூரமும் முருகக் கடவுளுக்கு கிருத்திகை என்றெல்லாம் முக்கிய தினங்கள் உண்டு. மகா சிவராத்திரி, பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, ஆண்டாளுக்கு ஆடிப்பூரம் என அந்தந்த தெய்வங்களுக்கு உரிய நாட்கள் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளாக இருக்கின்றன. அந்த நாட்களில், உரிய முறையில் பூஜைகளும் வழிபாடுகளும் செய்வோம். மாத வழிபாடுகளும் விரதங்களும் இருந்து வழிபடுவார்கள் பக்தர்கள்.

இப்படித்தான், முருகப்பெருமானுக்கு தைப்பூசமும் கார்த்திகை மாதத்தின் கார்த்திகைப் பெருவிழாவும் பங்குனி மாதத்தில் உத்திரமும் வைகாசி மாதத்தில் விசாகமும் முக்கிய தினங்களாகவும் விரத நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.
இவை எல்லாவற்றிலும் விநாயகர் வழிபாடு என்பதும் தரிசனம் என்பதும் முதலில் நடைமுறையில் இருப்பதை அறிவோம். அதன்படியே நாமும் வழிபடுவோம். அதன் பிறகே அந்தந்த கடவுளர்களை வணங்குவோம்.

பூஜையோ ஹோமமோ செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் பூஜையைத் தொடங்குவோம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, பூஜிக்கிறோம்தானே. ஏனென்றால்... ஆனைமுகத்தானே முதற் கடவுள். முழு முதற் கடவுள்.

இத்தனை மகத்துவம் மிக்க பிள்ளையாருக்கு மாதந்தோறும் வருகிற சதுர்த்தி நாளில், வழிபாடுகளும் விரதங்களும் இருப்பது எண்ணற்ற பலன்களைத் தந்தருளும். இந்த நாளை, சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

அற்புதமான அதிர்வுகள் கொண்ட சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு அருகம்புல் மாலையும் வெள்ளெருக்கு மாலையும் சார்த்தி வழிபடுவது எண்ணியதையெல்லாம் நிறைவேற்றித் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். விக்னங்களையெல்லாம் அழித்து அருள் செய்வார் விக்னேஸ்வரர்.

சங்கடஹர சதுர்த்தி நாளில், வீட்டில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். இன்று ஆகஸ்ட் 7ம் தேதி வெள்ளிக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி. வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்பார்கள். விநாயகர் படத்தை, சுத்தமாகத் துடைத்து, சந்தனம் குங்குமமிடுங்கள். அருகம்புல் சார்த்துங்கள். விநாயகருக்கு ரொம்பவே இஷ்டமான கொழுக்கட்டை, பாயசம், சுண்டல் என உங்களால் முடிந்ததை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.

சுக்கிர வாரத்தில் சங்கடஹர சதுர்த்தி நாளும் வருவது இன்னும் சிறப்பு வாய்ந்தது. கணபதி துதிகளைச் சொல்லுங்கள். கஷ்டமெல்லாம் தீர்ப்பார் கணபதி. சுக்கிர யோகங்களையெல்லாம் தந்தருள்வார் விநாயகப் பெருமான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x