Last Updated : 30 Jul, 2020 08:51 PM

 

Published : 30 Jul 2020 08:51 PM
Last Updated : 30 Jul 2020 08:51 PM

ஆடி வெள்ளியில் குத்துவிளக்கில் மகாலக்ஷ்மி 

ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை தவறவிடாமல், பூஜைகளிலும் வழிபாடுகளிலும் கவனம் செலுத்துங்கள். மனதை ஒருநிலைப்படுத்தி சக்தி வழிபாட்டில் ஈடுபடுங்கள். உங்கள் வாழ்வில் இதுவரை சந்தித்த கஷ்டங்களெல்லாம் காணாமல் போய்விடும். இதுவரை எதிர்பார்த்த காரியங்களெல்லாம் இனிதே நிறைவேற்றித் தருவாள் அம்பிகை.

ஆடி மாதம் அற்புத மாதம். ஆடி மாதம் சக்திக்கு உரிய மாதம். ஆடி மாதம் அம்பாளுக்கு உரிய மாதம். எனவே அம்பாள் வழிபாட்டை, இந்த ஆடி மாதம் முழுவதுமே செய்யவேண்டும்.

பொதுவாகவே, வெள்ளிக்கிழமை என்பது அம்பாளுக்கு உரிய நாள். அதிலும் மகாலக்ஷ்மிக்கு உரிய நாள். அதனால்தான் வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்று போற்றுகிறோம். வெள்ளிக்கிழமையன்று மகாலக்ஷ்மியை வழிபடுவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.

அதேபோல், ஒரு வீட்டுக்கு வந்திருக்கும் மருமகளை, வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மி என்கிறோம். விளக்கேற்றி வைக்க மகாலக்ஷ்மி வந்துவிட்டாள் என்று போற்றுகிறோம். சீராட்டுகிறோம். அப்படி மகாலக்ஷ்மி என்று எல்லோரும் சொல்லி, சீராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியதாக இருக்கிற பெண்கள், வெள்ளிக்கிழமையன்று அதிலும் ஆடி வெள்ளிக்கிழமையன்று பூஜிப்பதும் வழிபடுவதும் பிரார்த்திப்பதும் அந்த இல்லத்தையே உயர்த்தும். உன்னத நிலைக்குக் கொண்டு செல்லும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆடி மாதம் பிறந்து, மூன்றாவது வெள்ளிக்கிழமையும் வந்துவிட்டது. நாளைய வெள்ளிக்கிழமையில், மறக்காமல் அம்பாள் வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக, வீட்டில் உள்ள பெண்கள், பூஜையறையை சுத்தம் செய்துகொள்ளுங்கள். சுவாமி படங்களை சுத்தம் செய்யுங்கள். வழக்கமாக பூஜையறையில் காமாட்சி விளக்கு, அகல்விளக்கு ஏற்றி வைப்போம். குத்துவிளக்கு எடுத்துக்கொள்ளுங்கள். எப்போதும் குத்துவிளக்குதான் பயன்படுத்துகிறோம் என்றால் ரொம்பவே நல்லது.

குத்துவிளக்கை எடுத்துக்கொண்டு, பூஜையறையில் சுவாமி படங்களுக்குக் கீழே, மாக்கோலமிட்டு, அதன் மேலே குத்துவிளக்கை வையுங்கள். அந்தக் குத்துவிளக்கிற்கு, சந்தனம் குங்குமமிடுங்கள். குத்துவிளக்கின் உச்சிப் பகுதியிலும் நடுப்பகுதியிலும் கால் பகுதியிலும் மல்லிகை, சாமந்தி என ஏதேனும் மலர்கள் கொண்டு அலங்கரியுங்கள்.

பின்னர், விளக்கேற்றுங்கள்.குத்துவிளக்கை அம்பாளாகவே அலங்கரியுங்கள். பழங்கள், வெற்றிலை, பாக்கு முதலானவற்றை நுனி இலையில் குத்துவிளக்கிற்கு முன்னே வைத்துக்கொள்ளுங்கள். பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்புகளை நைவேத்தியத்துக்கு வைக்கலாம். மேலும் சுத்த அன்னம் வைப்பதும் நல்லது.

அரளி, மல்லி, முல்லை, ரோஜா முதலான மலர்களைக் கொண்டும் குங்குமம் கொண்டும் அர்ச்சனை செய்யுங்கள். அம்மன் போற்றி சொல்லுங்கள்.

நாளைய தினம் 31ம் தேதி வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதமும் கூட. குத்துவிளக்கில் அம்பாளை ஆவாஹனம் செய்து, மகாலக்ஷ்மியை ஆராதியுங்கள். நைவேத்தியப் பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். உங்கள் வாழ்வில் இதுவரை இருந்த கஷ்டங்களும் துயரங்களும், துக்கங்களும் வேதனைகளும் காணாமல் போகும். இதுவரை உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய, எதிர்பார்த்த, உங்கள் குடும்பத்தாருக்குத் தேவையான சகல சம்பத்துகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்து தருவாள் மகாலக்ஷ்மி.

இல்லத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்வாள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x