Last Updated : 23 Jul, 2020 06:41 PM

 

Published : 23 Jul 2020 06:41 PM
Last Updated : 23 Jul 2020 06:41 PM

நாக சதுர்த்தியில் புற்றுக்கு பால்; சர்ப்ப தோஷம், ராகு - கேது தோஷம் விலகும்!  ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், நாக சதுர்த்தி- ஒரேநாளில் மூன்று விசேஷங்கள்! 

நாக சதுர்த்தி விரத நாளான நாளைய தினம் 24ம் தேதி வெள்ளிக்கிழமை, புற்று வழிபாடு செய்யுங்கள். புற்றுக்கு பால் வழங்குங்கள். கால சர்ப்ப தோஷம் முதலான ராகு கேது தோஷங்கள் அனைத்தும் விலகும். ,

பனிரெண்டு மாதங்களில், அதிக பண்டிகைகளும் பூஜைகளும் கொண்ட மாதம் என்றால் அது ஆடி மாதம்தான். அம்பாளுக்கு உகந்த மாதம் இது. சக்திக்கு உரிய மாதம் இது. தோஷங்களை நீக்கும் மாதம் என்றும் சந்தோஷத்தைக் கொடுக்கும் மாதம் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள்.

ஆடி மாதம் முழுக்கவே பூஜைகள் செய்வதற்கு உரிய நாட்கள்தான். ஆடி செவ்வாய்க்கிழமையும் ஆடி வெள்ளிக்கிழமையும் ஆடி ஞாயிற்றுக்கிழமையும் சக்தி வழிபாட்டுக்கான அற்புதமான நாட்கள்.
ஒவ்வொரு ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையிலும் வீட்டில் பூஜைகள் செய்வது குடும்பத்துக்கும் வம்சத்துக்கும் நல்லது. அளப்பரிய பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், கண்ணாடி, புடவை, ஜாக்கெட் முதலானவற்றை வழங்குவது வீட்டில் ஐஸ்வரிய கடாக்ஷத்தைத் தரும் என்பது ஐதீகம்.

நாளைய தினம் ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை. மேலும் உமையவள் அவதரித்த திருநாளான ஆடிப்பூரமும் நாளைய தினம் 24ம் தேதி அமைந்துள்ளது. இந்தநாளில்தான் அம்பாள் ருதுவான வைபவமும் கொண்டாடப்படுகிறது. சக்திக்கு உரிய நன்னாள் இது.

ஆடிப்பூரம் என்பதில் இன்னொரு விசேஷமும் அமைந்திருக்கிறது. ஆண்டாள் அவதரித்த நன்னாளும் ஆடிப்பூரத்தில்தான். ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில்தான் ஆண்டாள் அவதரித்தாள் என்று விவரிக்கிறது புராணம்.

எனவே, ஆடி வெள்ளியும் ஆடிப்பூரமும் இணைந்த நன்னாளில், மகாசக்தியாகிய அம்பாளையும் ஆண்டாளையும் மகாலக்ஷ்மியையும் வழிபடுவதும் பிரார்த்தனை செய்வதும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளும்.

ஆடி வெள்ளி, ஆடிப்பூரம் என்பது மட்டும்தானா? எப்போதும் ஆடிப்பூரத்தை அடுத்து வரக்கூடிய இன்னொரு முக்கியமான பண்டிகை, நாளைய தினம் ஆடி வெள்ளியிலும் ஆடிப்பூரத்திலும் ஒருசேர அமைந்துள்ளது.

ஆமாம்... நாளைய தினம், நாக சதுர்த்தித் திருநாள். ஒவ்வொரு ஆடி மாதத்தின் சதுர்த்தியில் நாக சதுர்த்தி எனும் முக்கியமான பூஜை நடந்தேறும். நாக சதுர்த்திக்கு மறுநாளும் முக்கியமான பூஜைதான். அது... கருட பஞ்சமி.

ஆக 24ம் தேதி வெள்ளிக்கிழமை ஆடி வெள்ளி, ஆடிப்பூரம் மற்றும் நாக சதுர்த்தி. மறுநாள் 25ம் தேதி சனிக்கிழமை அன்று கருட பஞ்சமி.

ஆடி வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு விளக்கேற்றி, வளையல் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். ஆண்டாளின் திருப்பாவை பாடி பிரார்த்தனை செய்யுங்கள். பாயசம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள சுமங்கலிகளுக்கும் கன்னிப்பெண்களுக்கும் வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்குங்கள்.

நாக சதுர்த்தி நாளும் நாளைய தினம் என்பதால், நாகர் வழிபாடு செய்வது மிக மிக அவசியம்.

திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தால், ‘ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் உள்ளது’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம். நாக சதுர்த்தி என்பது நாகருக்கு, அதாவது சர்ப்பத்துக்கு உண்டான முக்கியமான நாள். இந்தநாளில், அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று (பொதுவாகவே, புற்றுக் கோயில் என்பது வெட்டவெளியில் இருக்கும். எனவே, தற்போதைய காலகட்டத்தில் கோயில் நடை சார்த்தப்பட்டிருந்தாலும் புற்றானது வெளியே அமைந்திருப்பதால் வழிபடலாம்). வழிபடுவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. காலசர்ப்பம் முதலான தோஷங்களையெல்லாம் நீக்கக்கூடியது. ராகு - கேது முதலான தோஷங்களும் விலகும்.

புற்றுக்கோயிலுக்குச் சென்று, புற்றுக்கு பால், முட்டை இடுங்கள். ஊதுபத்தி ஏற்றுங்கள். அகல்விளக்கு ஏற்றி வையுங்கள். மஞ்சளையும் குங்குமத்தையும் புற்றுக்குத் தூவி ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். புற்று இல்லாமல், நாகர் சிலை உள்ள கோயிலுக்குச் சென்றும் வழிபடலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x