Last Updated : 16 Jul, 2020 04:10 PM

 

Published : 16 Jul 2020 04:10 PM
Last Updated : 16 Jul 2020 04:10 PM

உங்களைத் தேடி சாயிபாபாவே வருவார்;  துக்கத்தைப் போக்கும் ஷீர்டி பாபா தியான ஸ்லோகம்

விருப்பமும் வெறுப்பும் மனிதர்களுக்குதான். கவலையும் கர்வமும் நம்மிடம்தான். ஆனால் இந்த பாரபட்ச, பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் சாயிபாபா. தன்னை நாடி வருபவர்களிடம் எந்த வித்தியாசங்களும் ஏற்ற இறக்கங்களும் பார்க்க மாட்டார். தன் சந்நிதியை அடைந்து, கண்கள் மூடி நிற்பவர்களை, நின்று பிரார்த்தனை செய்பவர்களை, தன்னுடைய பேரருளை வியாபிக்கச் செய்கிறார் ஷீர்டி பாபா.

பாபாவின் பேரருள், நம்மை வழிநடத்துவதை மெல்ல மெல்ல உணர்ந்து, புரிந்துகொள்வோம். இன்னும் பாபாவின் சந்நிதிக்கு செல்லத் தொடங்குவோம். பாபாவும் அற்புதம்; அவரின் அருளாடல்களும் அதிசயம்.

’’உன்னை எல்லோரும் வெறுக்கிறார்களே என்று வருந்தாதே. உன்னை நிறைய பேர் விரும்புகிறார்களே என்று கர்வப்படாதே. இந்த இரண்டுமே ஒன்று என்றும், அதுவே மாயை என்றும் என்னைப் பார்க்க வரும் தருணத்தில், ஒருநாள் உணர்ந்துகொள்வாய். உனக்காக கவலைப்பட நான் இருக்கிறேன். வேறு எந்த சிந்தனையிலும் லயிக்காதே. குழப்பமாகிற, கோபமாகிற, வருந்துகிற தருணங்களிலெல்லாம் என்னை நினைத்துக்கொள்.. என்னையே நினைத்துக் கொண்டிரு. நல்லதே நடக்கும்’’ என்கிறார் ஷீர்டி சாயிபாபா.

மனதில் கலக்கமோ துக்கமோ, பயமோ சோகமோ அழுத்துகிற வேளையில், பாபாவை நினைத்துக் கொள்ளுங்கள்.

‘எனக்கு மட்டும் ஏனிப்படி?’ என்று புலம்பாதவர்களே இல்லை. ‘நான் ஒரு தப்பும் செய்யலையே’ என்று கண்ணீர் விடாதவர்களே இல்லை. ‘எவ்வளவு சம்பாதித்தும் நாலுகாசு சேர்க்கமுடியலையே’ என்று கலங்காதவர்கள் யார்தான் இருக்கிறார்கள்?

இதுமாதிரியான தருணங்களில், பாபாவை நினையுங்கள். ‘சாயிராம்’ என்று மனதில் சொல்லிக்கொண்டிருங்கள்.

தினமும் காலையிலும் மாலையிலும் ஷீர்டி பாபாவின் காயத்ரீயைச் சொல்லுங்கள். மனக்கலக்கத்தில் இருந்து உங்களை விடுவிப்பார் பாபா. உங்கள் துக்கத்தையெல்லாம் போக்கி அருளுவார் பாபா. உங்கள் மீது விழுந்த அபாண்டங்களையெல்லாம் மாற்றி, அப்பழுக்கில்லாதவர் என்பதை உலகுக்கு உணர்த்துவார்.

ஷீர்டி பாபா காயத்ரீ

ஓம் ஷீர்டி ஸாயி நிவாஸாய வித்மஹே
ஸர்வ தேவாய தீமஹி
தந்நோ ஸர்வ ப்ரசோதயாத்

**************
அப்படியே, பாபாவின் தியான ஸ்லோகத்தைச் சொல்லி, பத்து நிமிடமாவது அமர்ந்து, கண்கள் மூடி, பாபாவை பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் சம்பாத்தியத்தை இரட்டிப்பாக்குவார். இல்லறத் தேவைகளை நிவர்த்தி செய்து அருளுவார்.

ஷீர்டி பாபா தியான ஸ்லோகம்

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி;

ஷீர்டி பாபாவின் காயத்ரீயையும் தியான ஸ்லோகத்தையும் தினமும் சொல்லுங்கள். முடிந்த போதெல்லாம் சொல்லுங்கள்.

பாபாவின் மந்திரங்களை ஜபிக்க ஜபிக்க, பாபாவை நினைக்க நினைக்க உங்கள் கஷ்டங்களையும் துக்கங்களையும் போக்க உங்களைத் தேடி பாபாவே வருவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x