Last Updated : 10 Jul, 2020 12:26 PM

 

Published : 10 Jul 2020 12:26 PM
Last Updated : 10 Jul 2020 12:26 PM

நெய் தீபம்; குங்கும அர்ச்சனை; மகாலக்ஷ்மி மூலமந்திரம்; மாங்கல்யம் காக்கும் மகாலக்ஷ்மி வழிபாடு! 

வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நாள். சக்தியை வணங்க வேண்டிய அற்புதமான நாள். அதனால்தான் வெள்ளிக்கிழமையை, மங்கலகரமான செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டு அம்பிகையைக் கொண்டாடுகிறோம்.

அம்பிகை எப்போதுமே கருணை கொண்டவள். வீட்டின் கடாக்ஷத்துக்கு காரணகர்த்தாவாகத் திகழ்பவள். இல்லத்தில் பீடையையும் தரித்திரத்தையும் விரட்டியடிப்பவள். சுபிட்சத்தையும் அமைதியையும் ஆனந்தத்தையும் இல்லத்தில் நிறையச் செய்பவள். அதனால்தான், வெள்ளிக்கிழமைகளில், வீடு சுத்தம் செய்கிறோம். முதல்நாளே, பூஜையறைப் பொருட்களை, விளக்குகளை சுத்தப்படுத்தி வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு தயார்படுத்திக் கொள்கிறோம்.

பெண்கள், மற்றநாட்களைவிட வெள்ளிக்கிழமைகளில் தலைக்குக் குளிப்பார்கள். பூஜையறையில் விளக்கேற்றுவார்கள். தெரிந்த ஸ்லோகம், ஸ்தோத்திரங்களைச் செய்து வழிபடுவார்கள். கோயில்களுக்குச் சென்று, காலை 10.30 முதல் 12 மணி வரையிலான ராகுகால வேளையில், சக்தியின் இன்னொரு அம்சமாகத் திகழும் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவார்கள்.

வெள்ளிக்கிழமையில், வீடு சுத்தமாக இருந்து, மனதும் சுத்தமாக இருந்தால், அங்கே மகாலக்ஷ்மி நம் வீட்டுக்கு வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.
மகாலக்ஷ்மியின் அருள் இருந்தால், சுக்கிர பகவானின் அருளும் யோகமும் கிடைக்கப் பெறலாம். வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர யோகத்தைத் தரும் மகாலக்ஷ்மியை வணங்கினால், குடும்பத்தில் கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை மேலோங்கும். தரித்திரம் நீங்கி இல்லத்தில் சுபிட்சம் நிலவும். தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். கடன் தொல்லையில் இருந்தும் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும் விடுபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

வெள்ளிக்கிழமை என்றில்லாமல், தினமும் மகாலக்ஷ்மியின் மூல மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.

வீட்டில் விளக்கேற்றுங்கள். அம்பாளுக்கு செந்நிற மலர்கள் சூட்டி அலங்காரம் செய்யுங்கள்.

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏய்யேஹி

ஏய்யேஹி சர்வ

ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா


எனும் மந்திரத்தைச் சொல்லுங்கள்.

இதேபோல்,

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம;

என்கிற மந்திரத்தைச் சொல்லுங்கள்.

அம்பாள் படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். கோலமிடுங்கள். நெய் தீபமேற்றுங்கள்.

அம்பாள் படத்துக்கு முன்னே, கண்கள் மூடி அமர்ந்து, இந்த மந்திரங்களைச் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 16 முறை சொல்லலாம். 108 முறையும் சொல்லலாம். அப்போது குங்குமம் கொண்டும் அர்ச்சிக்கலாம். இன்னும் விசேஷம். மாங்கல்ய பலம் கிடைக்கப் பெறுவீர்கள்.

வெள்ளிக்கிழமையில் தொடங்குங்கள். தினமும் சொல்லுங்கள். ஒருநாள், பால் நைவேத்தியம் செய்யலாம். இன்னொரு நாள், பாலும் சர்க்கரையும் நைவேத்தியம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல், கேசரி, பாயசம் என முடிந்தால் நைவேத்தியம் செய்யலாம்.

இன்னும் முடிந்தால், சுமங்கலிகளுக்கு ஜாக்கெட் துணி, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கலாம்.

தொடர்ந்து, மகாலக்ஷ்மியை வணங்கி வந்தால், சுபிட்சம் நிலவும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்வாள். அருளுவாள். மாங்கல்யம் தருவாள். மாங்கல்யம் காப்பாள் மகாலக்ஷ்மி.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x