Last Updated : 09 Jul, 2020 06:05 PM

 

Published : 09 Jul 2020 06:05 PM
Last Updated : 09 Jul 2020 06:05 PM

சாயிபாபாவின் சக்தி தரும் மூலமந்திரம்;  தினமும் சொன்னால் திருப்பம் நிச்சயம்! 

குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும் என்பார்கள். குருவை எல்லாத் தருணங்களிலும் வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம். நாம் குருநாதராக எவரை வரித்துக் கொண்டிருக்கிறோமோ அவரை, அனுதினமும் வழிபட்டு நம்முடைய பிரார்த்தனைகளைச் சொல்லவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தென்னாடுடைய சிவபெருமானே தட்சிணாமூர்த்தி அம்சமாக இருந்து அருள்பாலிக்கிறார். கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளுகிறார் என்கிறது புராணம்.

குரு பிரகஸ்பதியை, நவக்கிரகங்களில் குருபகவானாக ஏற்று வணங்கிவருகிறோம். குருவுக்கு உண்டான ப்ரீத்தியை குறைவறைச் செய்து வருகிறோம்.
நம்மைப் படைத்த பிரம்மாவும் குரு அம்சம். ‘குரு பிரம்மா குரு விஷ்ணு’ என்று படைத்தவனையே முதல் குருவாகக் கொண்டு வணங்கச் சொல்கிறது இந்த ஸ்லோகம்.
மனித உலகில், கண்ணுக்கு முன்னே வாழ்ந்த குருமார்களை மகான்கள் என்று போற்றுகிறோம். வணங்குகிறோம். சதாசர்வ காலமும் அவர்களிடம் பிரார்த்தனை செய்கிறோம். அப்படி கண்கண்ட தெய்வமாக வணங்கப்படுகிறவர்தான் ஷீர்டி சாயிபாபா.

ஷீர்டி சாயிபாபா, மிக உன்னதமான குருநாதர் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். எவருடைய வீட்டில் சாயிபாபாவின் திருநாமம் சொல்லப்படுகிறதோ அந்த வீட்டுக்கு பாபாவின் அருள் கிடைக்கும் என்பது சாயி பக்தர்களின் நம்பிக்கை.

குருவுக்கு உகந்த நாள் என்று வியாழக்கிழமையைச் சொல்வார்கள். ஆனாலும் தினமும் குருவை வந்தனம் செய்வது மகோன்னதமானது என்கிறார்கள் சாயி பக்தர்கள். தினமும் சாயிபாபாவை ஒரு பத்துநிமிடம் வணங்கிவிட்டு, அன்றாடப் பணிகளைச் செய்யும் போது, அவர்களின் எல்லா காரியங்களிலும் பாபா உடனிருந்து நிறைவேற்றித் தந்தருள்கிறார் என்பது ஐதீகம்.

தினமும் பாபாவின் படத்துக்கோ சிலைக்கோ பூஜை செய்யுங்கள். தீப ஆரத்தி காட்டுங்கள். முன்னதாக, அவருக்கு எதிரே ஒரு பத்துநிமிடமேனும் அமர்ந்து, பாபாவின் மூல மந்திரத்தைச் சொல்லுங்கள்.

இதோ... அந்த மூல மந்திரம்;

ஓம் ஸாயி ஸாயி ஜெயஜெய ஸாயி.

இந்த ஒற்றை வரி கொண்ட மூல மந்திரத்தை, கண்கள் மூடி ஜபியுங்கள். தினமும் 108 முறை சொல்லுங்கள். முடிந்ததும் தீபாராதனை காட்டி வழிபடுங்கள். தினமும் சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி என்று நைவேத்தியம் செய்ய வேண்டும் என்கிற அவசியமெல்லாமில்லை.

நம்மிடம் இருப்பதை பாபாவுக்குக் கொடுத்தாலே போதும்... அதை ஏற்றுக் கொள்வார். நாம் பக்தியுடன் கொடுப்பதை, அன்புடன் ஏற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வதித்து அருளுவார். நம்மையும் நம் குடும்பத்தாரையும் காத்தருள்வார்.

எனவே, இரண்டே இரண்டு பிஸ்கட் வைத்தும் வேண்டிக்கொள்ளலாம். இரண்டு சாக்லெட் வைத்தும் வழிபடலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் சர்க்கரை வைத்து பூஜிக்கலாம். நாம் பாபாவுக்கு என்ன கொடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. நாம் எது கொடுத்தாலும் அவரின் அன்பையும் ஆசியையும் பேரருளையும் என்பதில் மாற்றமுமில்லை.

சாயிநாதனே சரணம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x