Last Updated : 07 Jul, 2020 12:38 PM

 

Published : 07 Jul 2020 12:38 PM
Last Updated : 07 Jul 2020 12:38 PM

அறிவில் தெளிவு; செயலில் வேகம்; திருவெண்காடு மகிமை! 

நவக்கிரகங்களில், குரு பகவானையும் சனி பகவானையும் மட்டுமே முக்கிய கிரகங்களாக, தெய்வங்களாகக் கருதி வழிபடுகிறோம். புதன் பகவானை அவ்வளவாக வழிபட மறந்துவிடுகிறோம். உண்மையில், நம்மை சிறப்புற செயல்படச் செய்வபவரே புத்தி பகவான் தான் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 12 கி.மீ. பயணித்தால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம். இந்தத் தலத்து இறைவன் ஸ்வேதாரண்யேஸ்வரர். புதன் பரிகாரத் திருத்தலம் இது. காவிரி வடகரையின் 11வது திருத்தலம். நவக்கிரக தலங்களில் இந்தத் தலமும் ஒன்று.


சந்திர பகவானுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவர் புதன். சிவ பக்தி கொண்டு, சிவனாரை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார் புதன். இதனால் சிவ வரம் பெற்றார். கிரகங்களின் ஒன்றாக உயர்வு பெற்றார் என்கிறது புராணம்.


நான்கு குதிரைகளைக் கொண்ட தேரில் வலம் வருபவர் புதன் பகவான். சூரியனைச் சுற்றிவரும் முதல் கிரகம் எனும் பெருமையும் புதனுக்கு உண்டு.
இருப்பதிலேயே மிகப்பெரிய துரோகம் குரு துரோகம் என்கிறது சாஸ்திரம். சந்திரனும் புதனும் குரு துரோகம் செய்த பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காக, சிவ வழிபாடு செய்த தலம் திருவெண்காடு. இங்கே குடிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்வேதாரண்யேஸ்வரரை வழிபட்டனர். இதனால் குரு துரோக பாவம் உள்ளிட்ட பாவங்கள் நீங்கப் பெற்றனர் என்கிறது ஸ்தல புராணம்.


திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருத்தலத்தில், புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. நம் புத்தியைத் தெளிவாக்கி திறம்பட நம்மை செயல்படச் செய்பவர் புதன் பகவானே! அதனால்தான் இவரை வித்யாகாரகன் என்கின்றனர்.


எனவே, புதன் பகவானை வேண்டிக்கொண்டால், கல்வியில் தெளிவு உண்டாகும். இசையில் விற்பன்னராகத் திகழலாம். கணிதத்திலும் ஜோதிடத்திலும் சிற்பக்கலைகளிலும் மருத்துவத்துறையிலும் சிறந்து விளங்கலாம்.


திருவெண்காடு தலத்தின் அம்பிகை பிரம்ம வித்யாம்பிகை. இவளும் ஞான சக்தியை அள்ளிக்கொடுப்பவள்தான். இவளின் சந்நிதிக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது புதன் பகவானின் சந்நிதி. புதன் பகவானுக்கு எதிரில் புதனின் தந்தையான சந்திர பகவானின் சந்நிதியும் சந்திரன் உருவாக்கிய சந்திர தீர்த்தமும் அமைந்திருக்கிறது.


கல்வியில் மந்த நிலையுடன் திகழும் குழந்தைகள், குழந்தை பாக்கியம் இல்லாமல் கலங்கித் தவிக்கும் தம்பதி, நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுவோர், திருவெண்காடு தலத்து இறைவனையும் அம்பாளையும் புதன் பகவானையும் திங்கள், புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் மனதார வேண்டிக்கொண்டால், குழந்தைகள் கல்வி கேள்வியில் சிறந்துவிளங்குவார்கள். தடைப்பட்ட பிள்ளைச் செல்வம் கிடைக்கும். நரம்பு முதலான நோயில் இருந்து குணமாவார்கள்.


புதன் கிழமைகளில், புதன் பகவானை மனதார வேண்டுங்கள். திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரரையும் பிரம்ம வித்யாம்பிகையையும் வழிபடுங்கள். அறிவில் தெளிவும் செயலில் வேகம் தந்தருள்வார் புதன் பகவான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x