Published : 26 Jun 2020 07:31 PM
Last Updated : 26 Jun 2020 07:31 PM

தில்லையம்பல நடராஜா... - ஆனித் திருமஞ்சனம் ஸ்பெஷல்

தில்லையம்பலத்தான், ஆடல்வல்லான், நடன நாயகன் என்றெல்லாம் கொண்டாடப்படுகிற நடராஜரின் பஞ்ச சபைகளில், சிதம்பரம் க்ஷேத்திரம் கனகசபை என்று போற்றப்படுகிறது. இத்தனை பெருமைமிகு சிதம்பரத்தில், தில்லை மூவாயிரம் பேர் என்று சொல்லப்படுகிற தீட்சிதர்களைக் கொண்டு பூஜைகள் நடைபெறுவது இன்னொரு மகத்துவம்.

அதேபோல், சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜருக்கு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் அபிஷேகம் நடைபெறும். அடுத்து ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தின் போது அபிஷேகம் நடைபெறும்.

"ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனைத்
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே."

விளக்கம் :
எனது உடலில் உயிர் இருக்கும் வரையிலும் நான் எனது உள்ளத்தில் தில்லைச் சிற்றம்பலவனாரின் நினைவுகள் நிலை பெற்றிருக்குமாறுச் செய்வேன்; எனக்குத் தேனாக இனிக்கும் சிவபெருமான், எனக்கு வீடுபேறு அளித்து, என்றும் பேரின்பத்தில் திளைக்க வைப்பார்.

அபிஷேக காலத்தில் அழகுக் கோலம் காட்டும் ஈசனே, உமக்கு நமஸ்காரம்.
அபிஷேகத்தால் சந்தோஷத்தை அடைகிறவரே. உலகத்தோர் அனைவரது மனக்கவலையையும் போக்கும் மஹாப் பிரதோஷ புண்ணிய காலத்து நாயகனே... உமக்கு நமஸ்காரம்.
பிரம்மா, நாராயணன், நந்திகேசர், நாரதமுனி இவர்களுடன் சேர்ந்து நர்த்தனம் செய்யும் நடராஜரே, சித்தபேசனே... உம்மை வணங்குகிறோம்.
இதேபோல்... ஆடல்வல்லானின் பெருமையை இதுவும் விவரிக்கிறது.
கனகஸபாகத காஞ்சனவிக்ரஹ
காமவிநிக்ரஹ காந்ததனோ
கலிகலிதாகில பாபமலாபஹ
க்ருத்திஸமாவ்ருததேஹ விபோ
குவலயஸன்னிப ரத்னவிநிர்மித
திவ்யகிரீட ஸுபாஷ்டதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!

விளக்கம் :
தங்க மயமாக ஜொலிக்கும் சபையில் அழகுத் தோற்றம் காட்டுபவரே, பொன்போன்று தகதகக்கும் பேரெழில் கொண்டவரே, மன்மதனை வீழ்த்தியவரே, திடகாத்திரமான சரீரம் கொண்டவரே, கலியினால் ஏற்பட்ட எல்லாவிகையான பாபங்கள் என்கிற அழுக்கைப் போக்குகிறவரே, யானைத் தோலை அணிந்தவரே, உலகையே காக்கும் பிரபுவே, நீலோத்பல மலர் நிறம்கொண்ட ரத்தினங்களால் இழைக்கப்பட்ட திவ்ய கிரீடத்தைச் சூடியவரே, மங்களமாக விளங்கும் எட்டு தோற்றங்களைக் கொண்டவரே, உலகின் நாயகனே, மங்களமானவரே, நடராஜப் பெருமானே, நமஸ்காரம். தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை எங்களுக்கு அளித்தல் வேண்டும் என்று விவரிக்கிறார் சிதம்பரம் நடராஜர் கோயிலின் வெங்கடேச தீட்சிதர்.

திருச்சிற்றம்பலம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x