Last Updated : 08 Jun, 2020 12:09 PM

 

Published : 08 Jun 2020 12:09 PM
Last Updated : 08 Jun 2020 12:09 PM

தொல்லைகளைத் தீர்ப்பாள் தில்லைக்காளி; துஷ்ட சக்தியைப் போக்கும் ராகுகால பூஜை!

கஷ்டமும் தொல்லையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக வருவதுதான் மனித வாழ்க்கையின் நியதி. எப்போதெல்லாம் துயரம் நம்மைத் துரத்துகிறதோ அப்போதெல்லாம் தில்லைக்காளியை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். துன்பத்தையெல்லாம் போக்கியருளும் மாமருந்து அவள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


ஆனந்தக்கூத்தன் நடராஜபெருமானுக்கும் உமையவளுக்கும் நடனத்தில் போட்டி வந்தது. ‘நீயா நானா?’ எனும் போட்டி. இருவரும் நடனமாடினர். சபையே கூடியிருந்தது. தேவர்களும் முனிவர்களும் கூடிநின்றனர்.


அப்போது சிவபெருமான் ஆடிய ஆட்டத்தை, தானும் அவ்விதமாகவே ஆடினார். ஆனால் தன்னுடைய காலை சிரசுக்கு அருகே தூக்கி ஆடிய ஆட்டத்தைக் கண்டு, வெட்கிப் போனார் உமையவள். சிவனே ஜெயித்தவர் என முடிவானது என்கிறது புராணம்.


இதில் கடும் உக்கிரமானாள் தேவி. காளியெனக் கொண்டு, தில்லையில் ஓரிடத்தில் வந்து அமர்ந்தாள். அப்படி அவர் நின்ற இடத்தில், பின்னாளில் கோயில் எழுப்பப்பட்டது. இன்றைக்கும் கோயில் கொண்ட இடத்தில் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கும் தன்னை மனதால் நினைத்து வேண்டுபவர்களுக்கும் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறாள் காளிதேவியாக!


தில்லை என்பது ஒருவகை மரம். தில்லை எனும் மரங்கள் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்தது அந்தக் காலத்தில். எனவே அது தில்லைக்காடு என்றும் தில்லைவனம் என்றும் சொல்லப்பட்டது. இந்தத் தில்லையே இன்றைக்கு சிதம்பரம் எனும் ஊராகப் போற்றப்படுகிறது.


சிதம்பரத்தின் பிரமாண்டக் கோயிலில் ஆடல்வல்லான், கலைகளின் நாயகன் சிவனார் குடிகொண்டிருக்கிறார். இங்கே... ஊரின் ஒரு எல்லையில் கோயில் கொண்டிருக்கிறார் தில்லைக்காளி.

கடும் உக்கிரத்துடன் இருக்கும் தில்லைக்காளியை வணங்கிவிட்டு, நடராஜர் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களும் உண்டு. தீயவர்களிடமும் துஷ்ட சக்திகளிடமும்தான் உக்கிரமெல்லாம். நம்மைப் போன்ற சாமான்ய பக்தர்களிடம் கருணையை மழையெனப் பொழியும் அன்னை இவள்.
செவ்வாய், வெள்ளிக்கிழமை என்றில்லாமல், எப்போதெல்லாம் தோன்றுகிறதோ... அப்போதெல்லாம் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே, வீட்டிலிருந்தே தில்லைக்காளியை வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் அம்மனின் படத்தையே தில்லைக்காளியாக பாவித்துக்கொள்ளுங்கள். அவளுக்கு குங்குமமிடுங்கள். குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள். கல்யாணத் தடைகளைத் தகர்த்து அருளுவாள் தேவி. தடைப்பட்ட சுபகாரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவாள்.


செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகுகாலவேளையில், (செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.40, வெள்ளிக்கிழமையில் ராகுகாலம் காலை 10.30 முதல் 12 மணி வரை) தில்லைக்காளியை மனதார நினைத்து, வீட்டில் எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். மேலும் எலுமிச்சையால் வீட்டுக்குத் திருஷ்டி சுற்றிப் போடுங்கள். தீயதையெல்லாம் அழித்து, நல்லனவற்றையெல்லாம் காப்பாள் தில்லைக்காளி.


துஷ்ட சக்திகளை விரட்டுவாள். துக்கமெல்லாம் போக்குவாள். எதிர்ப்பின் சக்தியை வலுவிழக்கச் செய்வாள் தேவி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x