Last Updated : 28 May, 2020 12:30 PM

 

Published : 28 May 2020 12:30 PM
Last Updated : 28 May 2020 12:30 PM

’சாயிராம்’ சொல்லி சாக்லெட் கொடுங்கள்; உங்கள் வாழ்க்கையை இனிக்கச் செய்வார் பாபா! 

நமக்கு ஏதேனும் சின்ன வலியோ வேதனையோ என்றால் துடித்துப்போய்விடுவார்கள். ‘ஐயோ... எம்புள்ள கஷ்டப்படுறானே...’ என்று கலங்கிவிடுவார்கள். எங்கே இருந்தாலும் ஓடிவந்து நம்மருகில் வந்துவிடுவார்கள். நம்மைத் தேற்றுவதிலும் அதில் இருந்து மீட்டெடுப்பதிலும் துணையாக இருப்பார்கள். பகவான் சாயிபாபாவும் அப்படித்தான். அப்பாவுக்கு அப்பாவாய், அம்மாவுக்கு அம்மாவாய் இருந்து நம்மை வழிநடத்தி அருளும் ஒப்பற்ற மகான். கண்கண்ட தெய்வமாக இருந்து, நமக்கு அருள்பவர். நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். நாம் துடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்.
சாயிபாபா, நம் தந்தைக்கு நிகரானவர். சிக்கலும் குழப்பமுமாக நாம் இருக்கும் வேளையில், தந்தையாகவே வந்து, நம் சிக்கல்களையும் குழப்பங்களையும் களைந்தெடுப்பவர் அவர்.

அந்த ஷீர்டி நாதன், நம் அம்மாவுக்கு இணையானவர். நம் கண்ணீரைத் துடைத்தெடுக்கும் முதல் கரம் அவருடையதாகத்தான் இருக்கும். அந்த மகான் வழங்கும் ஆறுதல், நம்மைத் தேற்றிவிடும். தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாதையைக் காட்டி உயர்த்திவிடும். அதுதான்... பாபாவின் பெருங்கருணை. அருள் மழை.

‘சாய்ராம் என்று நீங்கள் கூப்பிடுகிற போதெல்லாம் நான் உங்களுக்குப் பக்கத்தில் வந்துவிடுகிறேன். உங்களுக்குப் பக்கத்திலேயே இருந்து உங்களை வழிநடத்துகிறேன்’ என்று பகவான் சாயிநாதன் அருளியிருக்கிறார். இது பாபாவின் வாக்கு. சத்தியவாக்கு.

இனிய அன்பர்களே... கஷ்டமும் நஷ்டமும் யாருக்குத்தான் இல்லை. வலியும் வேதனையும் இல்லாத வாழ்க்கை, எவர்தான் வாழ்கிறார் இங்கே?
உங்களின் கஷ்டமும் நஷ்டமும் தீரவும், வலியும் வேதனையும் போகவும்... இதோ... இன்றைய வியாழக்கிழமையில்... பூஜையறையில் அமர்ந்து, ஐந்து நிமிடம் கண்கள் மூடி, ‘சாய்ராம்... சாய்ராம்... சாய்ராம்...’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். முடிந்தவரை சொல்லிக் கொண்டே இருங்கள். சாயிபாபாவை கூப்பிட்டபடியே இருங்கள். ஏதேனும் ஓர் ரூபத்தில், எவருடைய வடிவமாகவோ உங்களுக்கு அருகில் வந்தே தீருவார் சாயிபாபா. வந்து, உங்கள் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்தருள்வார் பகவான்.


இப்படித்தான்... சாயிபாபாவை மனதில் நிறுத்தி, ஒவ்வொரு தருணங்களிலும் ‘சாய்ராம்... சாய்ராம்...’ என்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூப்பிடுகிறார்கள். தங்கள் மனதில் கொட்டிக் கிடக்கிற மொத்தவலிகளையும் அவரிடம் கொட்டுகிறார்கள். மனதாலும் உடலாலும் படுகிற சிரமங்களில் இருந்து நம்மைக் காத்தருள்கிறார் ஷீர்டி நாயகன்.


அவல் பாயசமோ சர்க்கரைப் பொங்கலோ கேசரியோ நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். எதுவும் இயலாதா? சாக்லெட் வைத்து வழிபடுங்கள். ஒரு ஐந்துபேருக்கு சாக்லெட் வாங்கிக் கொடுங்கள். அப்படிக் கொடுக்கும்போது, ‘சாயிராம்... சாயிராம் ... சாயிராம்’ என்று மனதுக்குள் சொல்லுங்கள். அந்த சாக்லெட்டுகள், சாயிநாதனின் பிரசாதமாகிவிடும்.


இந்த இனிப்பான சாக்லெட்டை வழங்க வழங்க, உங்கள் வாழ்க்கையே இனிக்கச் செய்வார் சாயிபாபா!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x