Last Updated : 26 May, 2020 10:14 AM

 

Published : 26 May 2020 10:14 AM
Last Updated : 26 May 2020 10:14 AM

காளிகாம்பாள் கோயிலில் ஸ்ரீசக்ரம்;  கவலைகளைத் தீர்ப்பாள் காளிகாம்பாள்

ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்த அம்மன் கோயில்கள் ரொம்பவே சக்திமிக்கவை என்று போற்றப்படுகின்றன.

சக்திபீடங்களுக்கெல்லாம் தலைமை பீடம் என்று போற்றப்படுவது காஞ்சி மாநகரம். இங்கே உள்ள காமாட்சி அன்னைதான், சக்திபீடங்களின் தலைமைபீடம், சக்தீபீடங்களின் தலைவி .

காமாட்சி அம்பாள் சந்நிதியில், ஸ்ரீசக்ரத்தைப் பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர். இந்த ஸ்ரீசக்ரத்தில், லலிதா சகஸ்ரநாமத்தை இயற்றிய வாக்தேவதைகள் எண்மர், எழுந்தருளி வியாபித்திருக்கின்றனர் என்கிறது காஞ்சி புராணம்.

அதேபோல், மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயில் நகரம் கும்பகோணம் அருகில் உள்ள பாஸ்கரராஜபுரம் தலத்திலும் அம்பாள் சந்நிதியில் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கே அதன் சக்தி, அருள் வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஆந்திராவின் ஸ்ரீசைலம் பிரம்மராம்பிகா சந்நிதியிலும் புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் கோயிலிலும் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

திருச்சி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதியில் இன்னொரு சிறப்பாக, அம்பாளின் ஒரு காதில், ஸ்ரீசக்ர தாடங்கமும் இன்னொரு காதில் சிவசக்ர தாடங்கமும் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இத்தனை பெருமைகளும் சக்தியும் கொண்ட ஸ்ரீசக்ரம், சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் இங்கே வந்து, இந்த ஸ்ரீசக்ரத்தைப் பிரதிஷ்டை செய்து அருளியுள்ளார். எனவே, காளிகாம்பாளின் அருள்ராஜ்ஜியம், இன்றளவும் தொன்றுதொட்டு, எங்கெல்லாமோ பரவியிருக்கிறது என்கிறார்கள் காளிகாம்பாள் பக்தர்கள்.

ஸ்ரீசக்ரநாயகியாய் கொலுவிருந்து, பக்தர்களின் துக்கங்களையும் வாட்டங்களையும் போக்கி, அவர்களின் வாழ்க்கைச் சக்கரத்துக்கு அச்சாணியாக இருந்து அருள்பாலித்து வருகிறாள் காளிகாம்பாள். அதுமட்டுமா? ஸ்ரீசக்ர காளிகாம்பாளுக்கு, காளிகாம்பாள் கோயிலுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அதாவது, சந்நிதியில் ஸ்ரீசக்ரம் கொண்ட காளிகாம்பாளின் தேரும் ஸ்ரீசக்ரத் தேராகவே அமைக்கப்பட்டிருப்பது, இந்தக் கோயிலின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதாவது ஸ்ரீசக்ரமே இங்கு தேராக அமைந்துள்ளது. சக்ரராஜ விமானம் என்று சொல்லப்படும் இந்தத் தேர், கிண்ணித் தேர் என்றும் அழைக்கப்படுகிறது.


காளிகாம்பாள் அன்னையை மனதார நினைத்துக் கொண்டு, வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். நம் இன்னல்களையெல்லாம் தீர்க்க ஓடிவருவாள் காளிகாம்பாள். வைகாசி செவ்வாயில் வீட்டில் விளக்கேற்றி, காளிகாம்பாளை செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள்.
***************************************

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x