Last Updated : 19 May, 2020 01:00 PM

 

Published : 19 May 2020 01:00 PM
Last Updated : 19 May 2020 01:00 PM

மாத சிவராத்திரி, பிரதோஷம் இணைந்த நாளில் ஒரு நாலுபேருக்காவது தயிர்சாதப் பொட்டலம்!

மாத சிவராத்திரி என்பது மாதந்தோறும் சிவனாரை வழிபடும் அற்புதநாள். பிரதோஷம் என்பதும் சிவ வழிபாட்டுக்கு உரிய அருமையான நாள். இந்த இரண்டும் சேர்ந்து வரும் நாளில் தென்னாடுடைய சிவனாரை வழிபடுங்கள். சிக்கல்களும் இன்னல்களும் தீரும். கஷ்டங்களும் கவலைகளும் காணாமல் போகும் என்பது உறுதி.


மாதந்தோறும் சஷ்டி போல, ஏகாதசி போல, சிவராத்திரி வரும். சிவனாரை வணங்குவதற்கு உரிய அற்புதமான நன்னாள். இந்தநாளில், சிவராத்திரி விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். சிவநாமம், ருத்ரம், சிவகவசம் முதலானவற்றைப் பாராயணம் செய்வார்கள்.


வருகிற புதன்கிழமை 20.5.2020 புதன்கிழமை சிவராத்திரி. மாத சிவராத்திரி, வைகாசி மாத சிவராத்திரி. இந்த அற்புதமான நாளில், காலையும் மாலையும் சிவனாரை வழிபடுங்கள். தேவாரத் திருவாசகம் படித்து வேண்டிக்கொள்ளுங்கள். பதிகம் பாராயணம் செய்து பரமனைத் தொழுவது பல உன்னதங்களைத் தந்தருளும்.
அதேபோல், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் பிரதோஷம் வரும். அமாவாசைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் பெளர்ணமிக்கு மூன்றுநாட்களுக்கு முன்னதாகவும் பிரதோஷம் வரும். திரயோதசி திதியன்று வருவதே பிரதோஷம். இந்தநாளில், சிவ வழிபாடு செய்வதும் பசுக்களுக்கு உணவளிப்பதும் மிகுந்த விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


இந்த முறை, வருகிற புதன்கிழமை 20.5.2020 பிரதோஷம். அதாவது சிவனாருக்கு உகந்த சிவராத்திரியும் சிவனாருக்கு உரிய பிரதோஷமும் ஒரேநாளில் அமைவது கூடுதல் சிறப்பு.


புதன் கிழமையைச் சொல்லும்போது, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமையில், மாத சிவராத்திரியும் பிரதோஷமும் ஒருசேர வருகிறது. இந்த வீரியமுள்ள நாளில், காலை மற்றும் மாலை வேளையில் விளக்கேற்றுங்கள். சிவ ஸ்துதி சொல்லுங்கள். ருத்ரம் பாராயணம் செய்யுங்கள். அல்லது காதாரக் கேளுங்கள்.


மாத சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்த நாளில், முடிந்தால் விரதம் மேற்கொள்ளுங்கள். முக்கியமாக, விரதத்தை விட தானம் உயர்ந்தது. எனவே, இந்தநாளில், ஒரு நாலுபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள்.


வீட்டில் விளக்கேற்றி, குடும்பமாக அமர்ந்து பூஜை செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். குடும்பமாக நமஸ்கரித்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.


உங்கள் இன்னல்களெல்லாம் தீரும். கஷ்டங்களும் கவலைகளும் தவிடுபொடியாகும். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் போகும். துக்கங்களெல்லாம் பறந்தோடும். இதுவரை சந்தித்த மொத்த வேதனைகளில் இருந்தும் உங்களை மீட்டெடுத்து அருள்வார் சிவனார்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x