Published : 29 Apr 2020 10:16 AM
Last Updated : 29 Apr 2020 10:16 AM
சித்திரை மாதத்தின் சஷ்டி, ரொம்பவே விசேஷம். இன்று 28.4.2020 புதன்கிழமை சஷ்டி. முருகப்பெருமானுக்கு உரிய நன்னாளில் வேலவனை வழிபடுங்கள். பலமும் வளமும் தந்தருள்வார் வேலவன். நம் எதிர்ப்பெல்லாம் தூள்தூளாக்கிவிடுவார் ஞானக்குமரன்!
பொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு உரிய, அற்புதமான, வழிபாட்டுக்கு உரிய நாள். அதேபோல் வெள்ளிக்க்கிழமை என்பதும் குமரனை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள்.
சித்திரை மாதத்தில், சஷ்டியன்று முருகப்பெருமானை மனதார வேண்டிக்கொண்டு மாலையில் விளக்கேற்றுங்கள். விரதம் இருந்து முருக வழிபாடு செய்வதும் பன்மடங்கு பலன்களைத் தரும்.
விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் வருந்தத் தேவையில்லை. வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானைத் துதிக்கும் பாடல்களைப் பாராயணம் செய்வதும், கந்தசஷ்டி கவசம் படிப்பதும் மிகுந்த பலனைத் தரவல்லது.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். சித்திரை மாதத்து புதன்கிழமையில், சஷ்டியும் இணைந்திருக்கும் இந்த வேளையில், மாலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். முருகப் பெருமானின் படத்துக்கு தீப தூப ஆராதனை செய்யுங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள். தீய சக்திகளையும் எதிர்ப்புகளையும் விரட்டியருள்வார் வெற்றிவேலன்!
முடிந்தால், செவ்வரளி பூ அல்லது மாலை சார்த்துங்கள். வீட்டில் விளக்கேற்றி, சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, அந்தப் பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.
செவ்வாய் முதலான தோஷங்கள் விலகும். எதிர்ப்புகள் தூள்தூளாகும். கடன் தொல்லையில் இருந்தும் வழக்குச் சிக்கல்களில் இருந்தும் மீள்வீர்கள். தீய சக்தியையெல்லாம் விரட்டி அருளுவார் வேலவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT