Published : 17 Apr 2020 09:08 AM
Last Updated : 17 Apr 2020 09:08 AM
சார்வரி வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமை நாளில், வீட்டிலும் வாசலிலுமாக விளக்கேற்றுங்கள். நம் சங்கடங்கள் யாவும் தீரும். இல்லத்திலும் உள்ளத்திலும் மட்டுமின்றி தேசத்தில் சந்தோஷமும் அமைதியும் நிலவும்.
விகாரி வருடம் முடிந்து, சார்வரி ஆண்டு பிறந்திருக்கிறது. பொதுவாகவே, வழிபாட்டுக்கும் பூஜைக்கும் உரியநாளாக வெள்ளிக்கிழமை, முக்கியத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது. வெள்ளிக்கிழமையன்று வீட்டில் பூஜை செய்வதற்காகவே, பூஜையறையைச் சுத்தம் செய்வார்கள். விளக்குகளை நன்றாகத் தேய்த்து வைப்பார்கள். பூஜைக்கான பூக்களையெல்லாம் வாங்கிவைப்பார்கள்.
வெள்ளிக்கிழமை என்பது மகாசக்திக்கு உரிய நாள். சக்தி என்பவளே, லோகநாயகி. இந்த உலகையே காக்கும் வல்லமை மிக்கவள் என்று சக்தியைக் கொண்டாடுகிறது தேவி மகாத்மியம்.
இன்று 17.04.2020 வெள்ளிக்கிழமை. சார்வரி ஆண்டு பிறந்து வருகிற முதல் வெள்ளிக்கிழமை இன்று. இந்த நன்னாளில், வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். குடும்பமாக அமர்ந்து தெரிந்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யுங்கள். அம்மன் திருமாங்களைச் சொல்லி வழிபடுங்கள்.
மாலையில், வீட்டுப் பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றுங்கள். லலிதா சகஸ்ரநாமம் முதலானவற்றைப் பாராயணம் செய்யுங்கள். வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். எனவே சுக்கிர யோகம் நிறைந்திருக்கும் நாள் இன்று. வீடு சுபிட்சமாக்கித் தந்தருள்வாள் அம்பிகை.
முடிந்தால், மாலையில் அவல் பாயசம், பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் என நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.
நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்து வைப்பாள் மகாசக்தி. நம் தேசத்துக்கும் அகில உலகுக்கும் சந்தோஷங்களை அள்ளித் தருவாள் பராசக்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT