Last Updated : 29 Mar, 2020 04:46 PM

 

Published : 29 Mar 2020 04:46 PM
Last Updated : 29 Mar 2020 04:46 PM

தீய சக்தியை விரட்டுவார் சரபேஸ்வரர்!  சக்தியைத் தரும் சரபாஷ்டகம்

சக்தி மிக்கவர் ஸ்ரீசரபேஸ்வரர். அவருக்கே சக்திகளாய்த் திகழ்பவர்கள் ஸ்ரீப்ரத்யங்கிரா தேவியும் ஸ்ரீசூலினியும் என்கிறது புராணம். இவர்களில், ப்ரத்யங்கிரா தேவியானவள், சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவளின் உதவி கொண்டே ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் புராணம் தெரிவிக்கிறது!


சரபேஸ்வரரின் சக்தி அளப்பரியது. எதிரிகளால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் ஆகியவைக்கு மட்டுமின்றி, இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் சகல நோய்களையும் தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம். தீயசக்தியிடமிருந்து நம்மைக் காத்தருள்வார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


‘நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி’ என்று ஸ்ரீசரபேஸ்வரரைப் போற்றுகின்றன ஞானநூல்கள். நாம் தரிசிக்கிற சரபபேஸ்வர மூர்த்தங்கள், பிற்காலச் சோழ மன்னர்கள் காலத்தில் வந்தவை என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருபுவனம் திருத்தலத்தில் மிகப் பிரமாதமாக, பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார் ஸ்ரீசரபேஸ்வரர். இவருக்கு இங்கே சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன.


சிதம்பரம் கோயிலிலும் தனிச் சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கிறார். ஞாயிற்றுக்கிழமைகளில், ஸ்ரீசரபேஸ்வர தரிசனம் சர்வ பாப விமோசனம் என்கிறது புராணம்!


நம் கஷ்டங்கள் நீங்கவும், தீய சக்திகளின் ஆதிக்கம் விலகி ஓடவும், எதிர்ப்புகள் மொத்தமும் விலகி, விரும்பிய வாழ்க்கையை நிம்மதியாக வாழவும் சரபேஸ்வரரின் இந்த மந்திரத்தைச் சொல்லுங்கள். வீட்டில் விளக்கேற்றி, பூஜையறையில் அமர்ந்து, கண்கள் மூடி, இந்த மந்திரத்தை 11 முறை அல்லது 24 முறை அல்லது 108 முறை சொல்லுங்கள்.


ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய


எனும் ஸ்ரீசரபாஷ்டகத்தை முடிந்த போதெல்லாம் சொல்லி ஸ்ரீசரபேஸ்வரரை மனதார பிரார்த்தனை செய்வது, சகல நன்மைகளையும் தந்தருளும். ஞாயிற்றுக் கிழமையிலும் ராகு கால வேளைகளிலும் ஸ்ரீசரபாஷ்டகத்தைச் சொல்லுங்கள். சங்கடங்கள் அனைத்தும் விலகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x