Published : 29 Mar 2020 12:38 PM
Last Updated : 29 Mar 2020 12:38 PM

அட... துளசிக்கு இத்தனை மகிமையா?

சகல தோஷங்களையும் துயரங்களையும் விரட்டும் வல்லமை வாய்ந்தது துளசி. புராணங்களிலும் புனித நூல்களிலும் துளசியின் பெருமை குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.


ஓரிடத்தில் வகை வகையாக மலர்ச் செடிகள் செழித்து வளர்ந்திருந்தாலும் அங்கு துளசிச் செடி இல்லையெனில், அந்த இடத்தை நந்தவனமாக ஏற்க இயலாது. துளசி படர்ந்த இடத்தை ‘பிருந்தாவனம்’ என்று சொல்லுவார்கள். துளசிக்கு ‘பிருந்தா’ என்றும் பெயர் உண்டு.


வாழ்நாளின் அந்திம காலத்தில் துளசி தீர்த்தம் உட்கொள்பவர், மகா விஷ்ணுவுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்பது ஐதீகம்.

பூஜைக்காக துளசியைப் பறிக்கும்போது, அதிகாலை வேளையிலும், நகம் படாமல் விஷ்ணுவின் பெயரை உச்சரித்தவாறும் துளசியைப் பறிப்பதே முறை. துளசியைப் பறித்து மூன்று நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம். தனித்தனி இலையாகப் பறிக்காமல் நான்கு இதழ், ஆறு இதழ்களாகப் பறிக்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

முன்னோர் திதிநாள், விரத நாள், தெய்வப் பிரதிஷ்டை தினம், மகாவிஷ்ணுவை வழிபடும் வேளை, தானம் கொடுக்கும் நேரங்களில் துளசியை உபயோகிப்பதால், பன்மடங்கு பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.


சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒரே இடத்தில் பூஜை செய்பவர்களுக்கு, முக்காலத்தையும் உணரும் சக்தி ஏற்படும். பரமபத வாசல் கிடைப்பது உறுதி என்கிறது தர்ம சாஸ்திரம்.

ஒரு துளசி தளத்தில் 33 கோடி தேவர்களும், பன்னிரு சூரியர்களும், அஷ்ட வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கின்றனர் என்பதாக ஐதீகம். அதன் நுனிப்பகுதியில் பிரம்மாவும் நடுவில் மகாவிஷ்ணுவும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரீதேவி, பார்வதி ஆகியோரும் வசிக்கின்றனர்.

துளசியை வளர்த்து வழிபடுபவதால் ஆயுள் பலம், புகழ், செல்வம், குழந்தைப்பேறு ஆகியன கிட்டும். துளசி காஷ்டம் என்ற மணிமாலையைக் கழுத்தில் அணிபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் முழுவதுமாக விலகும். சகல பாபங்களும் விலகி புண்ணியங்கள் பெருகும் என்கிறது துளசி புராணம்.

எந்த இடத்தில் துளசிச் செடி உள்ளதோ அங்கே அகால மரணம் ஏற்படாது. அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு துர்மரணமில்லை.
துளசியை பூஜை செய்து வந்ததன் பலனாகவே சீதாதேவி ராமபிரானைக் கணவராக அடைந்ததாக துளசி ராமாயணம் கூறுகிறது. சிலர், கருந்துளசியைப் பயன்படுத்தக் கூடாது என்பார்கள். இது தவறு. கருந்துளசிக்குக் ‘கிருஷ்ண துளசி’ என்ற பெயர் உண்டு. இதை, கிருஷ்ணருக்கு மட்டுமல்ல, எல்லா தெய்வங்களுக்குமே பயன்படுத்தலாம்.


விநாயகர், சக்திதேவி, சிவனார் ஆகியோருக்கு துளசி போடாமல் தவிர்க்கலாம். பச்சையும், சிறிது வெண்மையும் கலந்ததே வெண் துளசி. இதை ராமபிரானுக்கும் அனுமனுக்கும் சூட்டலாம். இவை தவிர, செந்துளசி என்றும் வகையும் அரிதாகக் கிடைக்கிறது.

அமாவாசை அன்று யாக்ஞவல்கியரின் மனையாளான காத்யாயினி சக்தியை துளசியால் வழிபட்டால், பிரிந்த தம்பதி மீண்டும் இணையும் பாக்கியம் கிடைக்கும். தாலி பாக்கியம் நிலைக்கும். துஷ்ட சக்திகளும் துர்சகுனங்களும் விலகிவிடும். ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் வாழலாம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x