

பங்குனி சஷ்டியில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, கந்தனைத் தொழுவோம். நம் கவலைகளும் துக்கங்களும் பறந்தோடச் செய்வான் வேலப்பன்.
மாதந்தோறும் வரும் சஷ்டி முருகப்பெருமானை வழிபட மிகவும் உகந்தநாள். இந்தநாளில், முருகப்பெருமானை செவ்வரளி மலர்கள் சார்த்தி வழிபட்டு, பிரார்த்தனை செய்வது மிகுந்த பலன்களைத் தந்தருளும்.
முருகபக்தர்கள், இந்த நாளில் விரதம் மேற்கொள்வார்கள். விரதமிருந்து முருகக் கடவுளின் நாமாவளியைச் சொல்லியபடி, சஷ்டி கவசம் பாராயணம் செய்தபடி பிரார்த்தனை செய்வாகள்.
நாளை 30.03.2020 திங்கட்கிழமை சஷ்டி. பங்குனி மாத சஷ்டி. சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையன்று வரும் சஷ்டி, சிவமைந்தனுக்கு மேலும் உகந்த நன்னாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
எனவே, சஷ்டி நாளில், முருகக் கடவுளை மனதாரத் தொழுவோம். காலையும் மாலையும் விளக்கேற்றுவோம். வீட்டு வாசலில் விளக்கேற்றுவது கூடுதல் பலன்களைத் தரும்.
முருகப்பெருமானை நினைத்து, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். ஸ்கந்தகுரு கவசம் படிக்கலாம். அரோகரா கோஷம் எழுப்பலாம். குடும்பத்தார் அனைவருமாக அமர்ந்து, முருகப்பெருமானை மனதார வழிபடுவோம். உலக நன்மைக்காகவும் உலக மக்களின் நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.
சஷ்டி நாளில், கந்தக்கடவுளை மனதாரத் தொழுவோம். கூட்டுப் பிரார்த்தனையால், ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் வாழ்வோம்.