Published : 04 Feb 2020 06:15 PM
Last Updated : 04 Feb 2020 06:15 PM

ராஜராஜ சோழன் கட்டிய வைணவத் தலம்...

சோத்தமங்கலம் ரங்கநாத பெருமாள் கோயில்.

சோழ சாம்ராஜ்யத்தை உலகுக்கு எடுத்துச் சொன்ன மன்னர்களில் ஒருவரான ராஜராஜ சோழன் தனக்கு மோட்சம் வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது, விஷ்ணுவை வழிபட்டால் மோட்சம் சித்தியாகும் என்று சிவபெருமான் கூறியவுடன் சோழ தேசமெங்கும் விஷ்ணுவைத் தேடி ராஜராஜ சோழன் சென்றார்.

அப்படி தேடிக்கொண்டே சென்றபோது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சோத்தமங்கலம் என்னும் சிற்றூருக்குச் சென்றார். அங்கு காலை நேரத்தில் சூர்யோதய தருணத்தில் அவ்வூரிலுள்ள தர்சபுஷ்கரணி குளத்தில் ராஜராஜ சோழன் குளித்தபோது, குளத்தின் நீரில் கோயில் ஒன்றின் கோபுரம் நிழலாய் தெரிந்தது. அதைக் கண்டு வியப்புற்ற ராஜராஜ சோழன் அங்கிருந்த விஷ்ணுவான பெருமாளை வழிபட்டார்.

அதைத்தொடர்ந்து, ராஜராஜ சோழன் தினமும் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு அன்னதானம் வழங்கியதால் நாளடையில் அன்னதானபுரம் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் அது சோத்தமங்கலம் என மருவியது.

இந்தக் கோயிலில் உள்ள பெரியாழ்வார், யானையின் மேல் அமர்ந்து தன் கைகளில் யானையின் மணியைக் கொண்டு எழுந்தருளியிருக்கிறார். இந்தக் காட்சி வல்லப தேவ பாண்டியன் அவையில் எம்பெருமான் ஸ்ரீமன்நாராயணனே பரத்வம் என்று நிர்ணயித்து பெரியாழ்வார் ஆண்டாள் நாச்சியாரைப் பெற்றார் போல, ராஜராஜ சோழன் ஸ்ரீரங்கநாதப் பெருமானைத் தொழுத பின்னரே அவருக்குக் குழந்தை பிறந்தது என்பது இந்த திவ்யமான திருத்தலத்தின் சிறப்பாகும். இந்த தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ராஜராஜ சோழன் கட்டிய வைணவக் கோயில் இது மட்டுமே.

தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுர கோஷ்டத்திலும், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோயில் கோபுர கோஷ்டத்திலும் நின்ற கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் வகையில் சிற்பங்கள் ராஜேந்திர சோழன் காலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பெருமாளுக்கும் சோழர்கள் காலத்தில் உரிய அங்கீகாரத்தை அளித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

ஆரம்ப காலத்தில் இந்தக் கோயில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் காணப்பட்டுள்ளது. காலப்போக்கில் பலரது படையெடுப்புகளால் இந்த கோயில் இடிக்கப்பட்டு, சிதிலமடைந்தது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் இந்த கோயிலை திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தினர்.

இந்தக் கோயிலில் ராஜராஜ சோழனுக்கு புத்திர பாக்கியம் கிட்டியதால், இங்கு வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அவ்வாறு வழிபட்டு பிரார்த்தனை நிறைவேறியதால் நேர்த்திக்கடனாக நடைவண்டியை வாங்கி பெருமாளுக்கு இன்றளவும் அளித்து வருகின்றனர்.

-வி.சுந்தர்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x