Published : 31 Dec 2019 02:40 PM
Last Updated : 31 Dec 2019 02:40 PM
வி.ராம்ஜி
மீசையுடன் இருக்கும் பெருமாள் என்றால், அவர் அல்லிக்கேணி அழகன் பார்த்தசாரதிப் பெருமாள்தான். அப்படி முறுக்கு மீசையுடன் இருக்கிற பார்த்தசாரதியை, இன்று 31ம் தேதி தொடங்கி 5ம் தேதி வரை, மீசை இல்லாமல் தரிசிக்கலாம்.
திருவல்லிக்கேணி கோயிலும் அழகு. கோயிலில் குடிகொண்டிருக்கும் அழகன் பார்த்தசாரதியும் கொள்ளை அழகு.
108 திவ்விய தேசங்களில் திருவல்லிக்கேணியும் ஒன்று. சென்னையின் முக்கியப் பகுதியான திருவல்லிக்கேணி, ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அற்புதத் தலம் இது. இங்கே பெருமாளின் திருநாமம் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள்.
இங்கே இந்தத் தலத்தில், வருடம் முழுவதும் விழாக்களும் விசேஷங்களுமாக அமர்க்களப்படும். ஆராதனைகள், திருவீதியுலாக்கள், உத்ஸவங்கள் என விமரிசையாக நடந்துகொண்டிருக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு, எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வருகை தந்தவண்ணம் இருக்கிற அற்புத ஆலயம் இது.
கருவறையில், நின்ற திருக்கோலத்தில் முறுக்கு மீசையுடன் அழகுடனும் கம்பீரமாகவும் காட்சி தருகிறார். பார்த்துக் கொண்டே இருக்கலாம், பார்த்தசாரதியை!
இதோ... மார்கழி பிறந்து, தினமும் விசேஷ பூஜைகள் விமரிசையாக நடந்துகொண்டிருக்கின்றன. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக பகல் பத்து உத்ஸவ விழாவும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து ராப்பத்து உத்ஸவ விழாவும் நடைபெறும். இப்போது, பகல் பத்து உத்ஸவ விழா நடந்துகொண்டிருக்கிறது.
இன்றைய நாளில் இருந்து (31.12.19) செவ்வாய்க்கிழமையில் இருந்து, மீசை இல்லாமல் பார்த்தசாரதியை தரிசிக்கலாம். திருக்கார்த்திகை தீபத்தன்று பெருமாளுக்கு தைலக்காப்பு நடைபெறும். அப்போதிருந்து பெருமாளை தரிசிக்க முடியாது. அதையடுத்து, இன்றில் இருந்து, சந்நிதி திறக்கப்பட்டு, தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். அப்போது மீசை இல்லாமல் காட்சி தருவார் பார்த்தசாரதி.
அதாவது பகல் பத்து விழா நடந்துகொண்டிருக்கும் 6வது உத்ஸவமான இன்று தொடங்கி வருகிற ஜனவரி 5ம் தேதி வரை மீசை இல்லாத பார்த்தசாரதியை தரிசிக்கலாம். அதன் பின்னர், வைகுண்ட ஏகாதசியில் இருந்து ராப்பத்து தொடங்கும். அப்போது முதல் வழக்கமான மீசை வைத்த பார்த்தசாரதியைத் தரிசிக்கலாம்.
இதனை திருமொழித் திருநாள் என்றும் ராப்பத்து கால உத்ஸவங்களை திருவாய்மொழித்திருநாள் என்றும் சொல்லுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT