Published : 17 Dec 2019 09:47 AM
Last Updated : 17 Dec 2019 09:47 AM

மார்கழி பிறப்பு... சஷ்டி... செவ்வாய்;  எதிரிகளை விரட்டுவான்; கடன் தொல்லை தீர்ப்பான் வேலவன்

வி.ராம்ஜி


சஷ்டி விசேஷம். மாதந்தோறும் வருகிற சஷ்டி அற்புதமான நாள். இன்னும் குறிப்பாக, மாத சஷ்டியும் செவ்வாய்க்கிழமையும் ஒருசேர வருவது கூடுதல் மகத்துவம். சஷ்டியும் முருகனுக்கு உரியது. செவ்வாய்கிழமையும் அவனுக்கு உகந்த அற்புத நாள். இன்று செவ்வாய்க்கிழமை சஷ்டி. முருகக் கடவுளை மறக்காமல் தரிசனம் செய்யுங்கள். உங்கள் எதிரிகளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போவார்கள்.


இன்றைய தினமான 17.12.19 செவ்வாய்க்கிழமையன்று சஷ்டி வந்துள்ளது. அதாவது, சஷ்டியும் செவ்வாயும். முருகனுக்கு உரிய நன்னாள். இந்தநாளில், கந்தபெருமானை வழிபடுவோம். கவலைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் கந்தகுமாரன். துக்கங்களையும் போக்கி அருளுவான் பார்வதி மைந்தன்.


பொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான வழிபாட்டுக்கு உரிய நாள். மாதந்தோறும் வருகிற சஷ்டி திதியில், முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பார்கள் பக்தர்கள். சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகனைப் போற்றுவார்கள்.
அதேபோல் செவ்வாய்க்கிழமை என்பதும் கந்தனை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள்.

செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்து வருவது மேலும் சிறப்பு. அதுமட்டுமா? மகிமை மிக்க மார்கழியின் தொடக்கநாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் ஒருசேர அமைந்துள்ளது. மிகவும் சாந்நித்தியமான நாள் இன்று! .


விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானைத் துதிக்கும் பாடல்களைப் பாராயணம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் படியுங்கள். எதிர்ப்புகள் விலகும். கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும். வேண்டியது அனைத்தையும் தந்தருள்வான் வேலவன்.


இந்த சஷ்டி நாளில், நான்குபேருக்கேனும் எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள்.

நமக்கு வந்த தடைகளையெல்லாம் தகர்த்துவிடுவான் வேலவன்.

கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிரிகளையும் விரட்டியடிப்பான் வேலவன்.


வழக்கில் ஜெயிக்க வைப்பான். வாழ்வில் உயரச் செய்வான். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பான். வீடு மனை முதலான யோகங்களைத் தந்தருள்வான் வள்ளிமணாளன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x