Published : 26 Nov 2019 09:46 AM
Last Updated : 26 Nov 2019 09:46 AM
வி.ராம்ஜி
கார்த்திகை அமாவாசை நன்னாள் இன்று. இந்தநாளில், மாலையில் முன்னோரின் படங்களுக்கு பூக்கள் சார்த்தி, விளக்கேற்றி வழிபடுங்கள். பீடையும் தரித்திரமும் விலகும். வீட்டில் ஒற்றுமை மேலோங்கும்.
அமாவாசை என்பது முன்னோருக்கான நாள். பித்ருக்களை வழிபடுவதற்கு உரிய அற்புத நாள். இந்தநாளில், முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதும் அவர்களை நினைத்து நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவதும் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது.
இதில் குளிர்ந்து போகிற பித்ருக்கள், நம் குடும்பத்தை சீரும் சிறப்புமாக வாழச் செய்வார்கள். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த தரித்திரம் விலகும்.
இன்று அமாவாசை. கார்த்திகை மாத அமாவாசை. இந்தநாளில், மாலையில் வீட்டைப் பெருக்கி சுத்தப்படுத்துங்கள். குளித்துவிட்டு, நம் முன்னோரின் திருவுருவப் படங்களுக்கு பூக்கள் சார்த்துங்கள். பூஜையறையிலும் வீட்டு வாசலிலும் விளக்கேற்றுங்கள்.
அப்போது, நம் பித்ருக்களுக்கு அதாவது இறந்துவிட்ட நம் தாய் தந்தையருக்குப் பிடித்தமான உணவை நைவேத்தியம் செய்யலாம். அப்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து, பித்ருக்களை மனதார வழிபடுவது மிக மிக அவசியம்.
அப்போது நம்முடைய வேண்டுகோளை முன்னோர்கள், கேட்டு அருள்பாலிப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
எனவே, கார்த்திகை மாத அமாவாசை நாளான இன்று, மாலையில் விளக்கேற்றுங்கள். முன்னோரை வழிபடுங்கள். வாழ்விலும் சுப நிகழ்விலும் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் நீங்கிவிடும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும் என்பது உறுதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT