Published : 21 Nov 2019 04:06 PM
Last Updated : 21 Nov 2019 04:06 PM

ஆட்டநாயகன்... தில்லை அம்பலம் நடராஜா!

வி.ராம்ஜி


உலகின் மிகச்சிறந்த நடனக்கலைஞன் சிவபெருமான். அதனால் ஆடல்வல்லான் எனும் பெயர் பெற்றார். ஆனாலும் சக்தியான அம்பிகையும் நடனத்தில் சிறந்தவள்தான்!


அங்கே... தன் விளையாட்டைத் துவக்கினான் ஈசன்.


சிவனாருக்கும் சக்திக்கும் நடனப் போட்டி நிகழ்ந்தது.


சபையில் தேவர்கள் முதலானோர் சூழ்ந்திருக்க, ஆட்டம் வேகமெடுத்தது. சிவனார் வலது கையைச் சுழற்றி ஆட, உமையவளும் அப்படியே ஆடினாள். அவர் இடது காலைச் சுழற்றி ஆட, அவளும் அதேபோல் ஆடினாள். சபையில் இருந்தவர்கள் வியந்து நிற்கும் வேளையில், சட்டென்று தனது காதிலிருந்து குண்டலத்தை விழச் செய்தார் சிவபெருமான். தனது கால் விரல்களால் பற்றி எடுத்த நடனநாயகன், அப்படியே காலை உயர்த்தி, காது வரைக்கும் தூக்கினார்; காலாலேயே குண்டலத்தை எடுத்து காதில் அணிந்தார். இதைக் கண்டு விக்கித்து நின்றாள் தேவி. தனது ஆட்டத்தை அப்படியே நிறுத்தினாள்.


‘சபையில் அனைவரும் கூடியிருக்கும் வேளையில், ஒரு பெண் இப்படிக் காலைத் தூக்கி ஆடுவது எப்படிச் சாத்தியம்?’ என்று யோசித்தவளாக, அவமானத்துடன் தலைகுனிந்து நின்றாள் உமையவள்.


அந்த வெட்கமும் தலைக்குனிவும் அவளுக்குள் கோபத்தைத் தூண்டின. கடும் உக்கிரமானாள். மகா காளியின் உருவெடுத்து நின்றாள். விறுவிறுவென வனத்தின் எல்லைக்குச் சென்றாள். இன்றைக்கும் எல்லைக்காளியாக இருக்கிறாள். தில்லைக் காளியாக நிற்கிறாள். சிதம்பரத்தில் கோயில்கொண்டபடி, அருள்பாலித்து வருகிறாள்.


தில்லை மரங்கள் சூழ்ந்த அந்தப் பகுதி தில்லை வனம் எனப்பட்டது. தற்போது சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. சிவனாரும் தேவியும் ஆடிய அந்த இடம் பொற்சபை எனப் போற்றப்படுகிறது.


இன்றைக்கும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சிதம்பரம் தலத்தையும் ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜரையும் தரிசிக்கின்றனர். முன்னதாக, தனிக்கோயிலில் எழுந்தருளும் ஸ்ரீதில்லைக்காளியை தரிசித்துவிட்டுத்தான், ஸ்ரீநடராஜரை தரிசிக்கவேண்டும் என்பது ஐதீகம்!


எட்டுத் திருக்கரங்கள். கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியபடி, ஒருகாலைத் தூக்கிய நிலையில், கடும் உக்கிரமாகக் காட்சி தருகிறாள் தில்லைக்காளி. இவளது உக்கிரத்தைக் கண்டு அஞ்சிய தேவர்களும் முனிவர்களும் சிவனாரிடம் முறையிட்டனர். இதையடுத்து, ‘உன்னைத் தரிசித்துவிட்டு என்னைத் தரிசிக்க வரும் அன்பர்களுக்கு அருள்புரிவேன்; உக்கிரம் தணிவாயாக!’ என சிவனார் அருளினார் என்கிறது ஸ்தலபுராணம்.


சிதம்பரம் வந்தால், தில்லைக்காளியையும் தில்லையம்பலம் நடராஜப் பெருமானையும் தரிசியுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x