Last Updated : 23 Jul, 2015 12:15 PM

 

Published : 23 Jul 2015 12:15 PM
Last Updated : 23 Jul 2015 12:15 PM

குலம் காக்கும் குரு பூஜை

சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம் ஜூலை 28

சாதுர்மாஸ்ய விரதம் என்றால் நான்கு மாத விரதம் என்று பொருள். ஆடி மாதம் தொடங்கி கார்த்திகை மாதம் வரையிலான நான்கு மழை மாதங்களே அவை. இந்த விரதம் துறவிகளுக்கு மட்டுமே. பொதுவாக ஏதோ ஒரு லௌகீகத் தேவையை முன்னிட்டே விரதம் இருப்பது வழக்கம்.

முற்றும் துறந்த முனிவர்கள் சாஸ்திர சம்பந்தமாக இருக்கும் விரதம் சாதுர்மாஸ்ய விரதம். துறவிகள், வெளியூர்களுக்குச் சென்றால் ஓர் இரவுக்கு மேல் தங்கக் கூடாது. அதிகபட்சம் மூன்று நாள் தங்கலாம் என்றாலும், மழை மாதத்தில் ஒரே இடத்தில் நான்கு மாதங்கள் தங்கி இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரங்கள். ஏனெனில், மழைக் காலத்தில்தான் பூச்சி, புழுக்கள் உட்பட ஊர்வனவை வெளியில் வரும். அவற்றைத் தெரியாமல் காலால் மிதித்துக் கொன்றுவிடும் பாவத்தைக் கூட துறவிகள் செய்யக்கூடாது என்பதற்காகவே இந்த விதிவிலக்கு.

முனிவருள் நான் வியாசர்

இந்த காலகட்டத்தில்தான் ஆடி பெளர்ணமியன்று, புத்தபூர்ணிமா என்ற வியாச பூஜை வரும். இதனை பீடாதிபதிகள் குருவுக்கான பூஜையாக வெகு விமர்சையாகக் கொண்டாடுவர். முனிவருள் தான் வியாசராக விளங்குவதாகக் கூறியுள்ளார்  கிருஷ்ணர். எனவே பரம்பரையாக பூஜை செய்யப்பட்டு வந்த கிருஷ்ண பகவானுக்கு இந்தக் காலகட்டத்தில் பூஜை செய்வார்கள்.

கூடவே பல தேவதைகளை எலுமிச்சம் பழங்களில் வரவழைத்து, பூஜை நடத்தி மரியாதை செய்வார்கள். விநாயகர், துர்கா பரமேஸ்வரி, பரமேஸ்வரன், லஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணு, சரஸ்வதி, பிரம்மா, சுகப்பிரம்ம ரிஷி, நாரத முனிவர், ஷேத்திர பாலர், அஷ்ட திக் பாலகர்களான இந்திரன், அக்னி, யமன், நிர்ருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் ஆவர்.

ஜநகர், ஸநந்தனர், ஸநாதனர், ஸநத்குமாரர் ஆகியோருடன் கூடிய தட்சிணாமூர்த்தி. சுமந்து, ஜைமினி, வைசம்பாயனர், பைலர் இவர்களுடன் கூடிய வியாச பகவான். வசிஷ்டர், சக்தி, பராசரர், கெளடபாதர், கோவிந்தபாதர் ஆகிய குரு பரம்பரையினர்.  ஆதிசங்கரர், சுரேச்வரர், பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர் ஆகியோர் அடங்கிய ஆசார்ய பரம்பரை. காமகோடி பீடாதிபதி ஜகத்குரு  சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் குரு பஞ்சகமான அவரது குரு, பரம குரு, பரமேஷ்டி குரு, பராபர குரு, சங்கர்ஷணர் ஆகியோர்.

இந்த உலகம் நலம்பெற வேண்டும்

இந்த பூஜைகள் குரு வந்தனமாக இருந்தாலும் இறுதியில் `லோகா சமஸ்தா சுகினோ பவந்து` என்று உலகிலுள்ளோர் நலம் பெற வேண்டுவார்கள் பீடாதிபதிகள். பின்னர் இந்த நாட்களில் வேத, புராண, இதிகாசங்களை விவரித்து கூறுவர். இவர்களுக்கு இந்த நான்கு மாதமும் உணவு கட்டுத்திட்டங்கள் மாறிவிடும். பால், தயிர் போன்றவற்றை ஒவ்வொரு மாதம் ஒன்று வீதம் விட்டுவிடுவார்கள்.

இல்லறத்தார், சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட பீடாதிபதிகள் ஒருவரையாவது இந்த நான்கு மாதத்தில் ஒரு முறையேனும் சென்று தரிசிக்க வேண்டும். துவைதம், அத்துவைதம், விசிஷ்டாதுவைதம் ஆகிய கோட்பாடுகளை முறையே கைக்கொண்ட, ஆனந்த தீர்த்தர் என்ற மத்துவர், ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோர் வழி வந்தவர்கள் அனைவரும் இந்த சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்வார்கள்.

அவர்கள் மூலம் வேத, வேதாந்தங்கள் அபரிமிதமாக வளர்ந்துவருகின்றன. அதனால் இந்த காலகட்டத்தில் அவற்றிற்கான சிறப்பு தர்மங்கள் செய்வதில் பக்தர்கள் பங்கேற்க வேண்டும். அதனால் குரு கிருபை ஏற்பட்டு புண்ணியம் கூடும் என்பது நம்பிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x