நவராத்திரி: தானங்கள்... பலன்கள்!

நவராத்திரி: தானங்கள்... பலன்கள்!

Published on

வி.ராம்ஜி

நவராத்திரிப் பெருவிழாவில், தினமும் பூஜைகள் முடிந்ததும் வீட்டுக்கு வந்திருக்கும் பெண்களுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்குவார்கள். எந்தப் பொருட்களைத் தானமாக வழங்குகிறார்களோ, அந்தப் பொருட்களுக்கு எந்தக் காலத்திலும் எப்போதும் எவரிடமும் கையேந்தத் தேவையில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

எந்தந்த நாளில் என்னவெல்லாம் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கலாம் என்றும் தாத்பரியம் தெரிவிக்கிறது.

பிரதமை திதியில் துவங்கும் போது, வீட்டுக்கும் பூஜைக்கும் வரும் பெண்களுக்கு கூந்தலை அலங்கரிக்கத் தேவையான எண்ணெய், மலர்கள், ஹேர் பின், ரிப்பன் முதலான பொருட்களை ஆடையுடன் சேர்த்து வழங்க வேண்டும்.

துவிதியை நாளில்... குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை ஆடையுடன் சேர்த்துத் தருவது நல்லது. இதனால் மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.

திருதியை நாளில், கண்ணாடி, மஞ்சள், கண் மை ஆகியவற்றை உடையுடன் சேர்த்து தானமாக வழங்கவேண்டும். இப்படிக் கொடுப்பதால், காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும்.

சதுர்த்தி நாளில், தம்பதியாக வரச் செய்து பொன்னிற ஆடையும் மஞ்சள், சந்தனமும் தானங்கள் வழங்குவது விசேஷம். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் மேலோங்கும்.

பஞ்சமி திதி நாளில், ஐந்து மங்கலப் பொருட்களையும் ஆடையையும் தானமாக வழங்கவேண்டும். மஞ்சள், சந்தனம், குங்குமம், சீப்பு, கண்ணாடி, தாலிச்சரடு, கண் மை, ரிப்பன் முதலான பொருட்களை வழங்கலாம். தடைப்பட்ட திருமணங்கள் விரைவில் நடந்தேறும்.

சஷ்டி திதியில், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, புடவை, ஜாக்கெட் பிட் ஆகியவற்றுடன் தட்சணையாக முடிந்த அளவு வைத்து தானமாகக் கொடுப்பது சிறப்பு. இதனால் நல்ல வரன் அமையும். விரும்பியபடி நல்ல கணவனை அடையலாம்.

சப்தமி திதியில், வீட்டுக்கு வந்திருக்கும் பெண்களைப் பாடச் சொல்லலாம். வந்திருப்பவர்களுக்கு ஏழு விதமான மங்கலப் பொருட்களை ஆடையுடன் சேர்த்துக் கொடுப்பது நலங்களையும் வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.

அஷ்டமி திதி நாளில், எட்டு விதமானப் பொருட்களை ஆடையுடன் சேர்த்துக் கொடுத்தால் ரொம்பவே விசேஷம். அந்தக் காலத்தில் இந்த நாளில், யானையை வரவழைத்து அதற்கு தேங்காய் பழங்கள் கொடுத்து, வலம் வந்து நமஸ்கரிப்பார்கள்.

நவமி நன்னாள் ரொம்ப விசேஷம். தேவ குதிரை பிறந்தநாள். வெள்ளைக் குதிரையை அழைத்து, கொள்ளு கொடுத்து வணங்குவார்கள் அந்தக் காலத்தில்! பள்ளி மாணவர்களுத் தேவையான நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் முதலான பொருட்களையும் ஆடைகளையும் தானமாகத் தந்தால், சந்ததி சிறக்கும். கல்வி கேள்வியில் சிறந்து விளங்கும் என்பது ஐதீகம்.

தசமி நாளில், தேவாரம், திருவாசகம் முதலான பக்தி நூல்களை ஆடையுடன் சேர்த்து தானமாக வழங்க வேண்டும். இறையருளைப் பெற்று இனிதே வாழலாம்!

நவராத்திரி நன்னாளில், முடிந்த அளவுக்கு தானம் செய்யுங்கள். சீரும் சிறப்புமாக, அமைதியும் ஆனந்தமுமாக வாழ்வீர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in