Published : 20 Sep 2019 11:43 AM
Last Updated : 20 Sep 2019 11:43 AM

 உங்கள் வீட்டுக்கு... உங்கள் பித்ருக்கள்! 

வி.ராம்ஜி

மகாளய பட்ச காலங்களில், முன்னோர்களை தினமும் ஆராதனை செய்யுங்கள். இந்த நாட்களில், உங்கள் வீட்டுக்கு உங்களின் பித்ருக்கள் வருவார்கள். ஆசீர்வதிப்பார்கள். உங்களை சகல சம்பத்துகளுடன் வாழச் செய்வார்கள்.


அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகணங்கள் என மறக்காமல் தர்ப்பணம் கொடுப்பது அவசியம். நல்லதும் கூட. அதேபோல், மகாளய நாட்களிலும் தொடர்ந்து தர்ப்பணம் செய்வது குடும்பத்துக்கு மிகப்பெரிய பலத்தையும் பலனையும் கொடுக்கும்.


பூலோகம் போல் பித்ரு லோகமும் உண்டு. அங்கே நம் முன்னோர்கள் அவரவரின் கர்மவினைக்குத் தக்கபடியான நிலையில் இருப்பார்கள். நாம் செய்யும் தர்ப்பணமும் எள்ளும் தண்ணீரும்தான் அவர்களின் தாகத்தைத் தணிக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இந்த நாட்களில், அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளைப் படையலாக்கி எல்லோருக்கும் வழங்குங்கள். காகத்துக்கு தினமும் உணவிடுங்கள். முன்னோர்களின் படங்களுக்கு பூக்களால் அலங்கரித்து தூப தீப ஆராதனை செய்யுங்கள். முடிந்தால், துளசி மாலை சார்த்துங்கள். இன்னும் மகிழ்ந்து போவார்களாம் பித்ருக்கள் என்று விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


மறுபிறவி உண்டு என்று இந்து தர்ம சாஸ்திரம் சொல்கிறது. அப்படியெனில், முன்னோர்களும் மறுபிறவி எடுத்திருப்பார்களே என்று எவரேனும் கேட்கலாம். அவர்களுக்குத் தர்ப்பணம் செய்யவேண்டுமா என்றும் குழம்பலாம்.

எப்படியிருப்பினும் முன்வினையால் செய்த கர்மவினைப்படி மறுபிறவியில் எங்கோ பிறந்து வாழ்ந்திருக்க... அவர்களை நினைத்து, அவர்களின் முந்தைய பிறவியையொட்டி நாம் செய்யும் தர்ப்பணம் அவர்களைப் போய்ச் சேரும். இதனால் அவர்களும் தர்ப்பணம் செய்ததால் நாமும் சுபிட்சமாகவும் நிம்மதியாகவும் வாழ்வோம்!


மகாளய பட்ச புண்ய காலமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள், நாம் அவர்களை நினைத்து வழிபடுவதைப் பார்க்க வருவார்கள் என்பதை மனதில் வைத்து, மனதார பித்ருக்களை பூஜியுங்கள். மங்கலகரமான நிகழ்வுகளும் மனதிற்கு இனிய வாழ்க்கையும் அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x