Published : 11 Sep 2019 10:17 AM
Last Updated : 11 Sep 2019 10:17 AM

பித்ரு வழிபாட்டில்... ஏழு முக்கியப் பொருட்கள்! 

வி.ராம்ஜி

வருகிற 14.9.19 சனிக்கிழமை அன்று மகாளய பட்ச காலம் தொடங்குகிறது. அன்று தொடங்கி, அமாவாசை வரை உள்ள நாட்கள், முன்னோரை தினமும் ஆராதிக்க வேண்டும். நமக்கான பித்ருக்கடமையைச் செய்யவேண்டும். தர்ப்பணம் செய்யவேண்டும் என அறிவுறுத்துகிறது தர்ம சாஸ்திரம்.


பித்ருக்களுக்கு செய்யும் சிராத்தத்தில், ஏழு பொருட்கள் அவசியம் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது சாஸ்திரம். இதை மிக அழகாக எடுத்துரைக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


1. உச்சிஷ்டம் நிர்மால்யம் வமனம் ஶ்வேத பர்ப்படம்.
ஶ்ராத்தே சப்த பவித்ராணி தௌஹித்ர: குதபஸ் திலா:


உச்சிஷ்டம் என்றால் எச்சில் பொருள்.பசுமாட்டினிடம் பால் கறக்கும்போது முதலில் கன்றுக்குட்டியை பால் புகட்டச் செய்து, பிறகு கன்றை விலக்கி விட்டு,மடியை அலம்பாமல் கன்றுக்குட்டியின் வாய் எச்சிலுடன் கறக்கப்படும் பசும்பால் தான் உச்சிஷ்டம் என்பது.இது பித்ருக்களுக்கு மிகவும் பிரியமானது. எனவே, பசும்பால் என்பது கட்டாயம் சிராத்தத்தில் சேர்க்கவேண்டும்.


2 . சிவ நிர்மால்யம்


தபஸ் செய்து பகீரதனால் ஆகாயத்திலிருந்து பூமிக்கு வரவழைக்கப்பட்ட கங்கா நதியை சிவபெருமான் தனது சிரசில் தாங்கிக் கொண்டார் . பின்னர், ஜடை முடியிலிருந்து கங்கா தேவி பூமியில் இறங்கினாள் என்கிறது புராணம். ஆகவே கங்கையானது சிவனுக்கு அபிஷேகம் செய்த ஜலம் என்பதால், அதனைக் கொண்டு சிவநிர்மால்யம் செய்யவேண்டும்.


.சிராத்தத்தில் ஆரம்பத்தில் கங்கா ஜலத்தால் வீடு முழுவதும் குறிப்பாக சமையல் செய்யும் இடத்தை ப்ரோக்ஷிக்கவேண்டும். அதையடுத்து, சிராத்த சமையல் செய்ய ஆரம்பிக்கலாம் மற்றும் கங்கா ஜலத்தை சாப்பிடும் முன்னர் ஆபோசனம் போடுவதற்கும் உபயோகிக்கலாம்.


3 . வமனம்


வமனம் என்றால் வாந்தி பண்ணி துப்பியது என்று அர்த்தம். அதாவது தேனீக்கள் பல பூக்களிலிருந்து தங்கள் வாயில் தேன் சேகரித்து கூட்டில் உமிழ்கின்றன.தேன் என்பது தேனிக்களால் துப்பப்பட்ட எச்சில் பொருள்.தேன் நம் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் பிரியமானது. எனவே, தேன் சேர்த்துக் கொள்வதால் பித்ருக்கள் மிகவும் சந்தோஷம் அடைகின்றனர்.


4 . ஸ்வேத பர்ப்படம்


ஸ்வேதம் என்றால் வெண்மை நிறம். பர்ப்படம் என்றால் பட்டுதுணி. பித்ருக்களுக்கு வெண்மை
நிறமுடைய பட்டுத்துணி மிகவும் உகந்தது.


ஆகவே கர்த்தா சிராத்தத்தின் போது வெண்ணிறப் பட்டு வேஷ்டி கட்டிக் கொள்வதும் சிராத்தத்தின் போது சாப்பிடுபவர்களுக்கு வெண்பட்டு அளித்து, அதை உடுத்திக் கொள்ளச் செய்வதும் பித்ருக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும் நிறைவையும் கொடுக்கும். சிராத்தம் செய்பவர்களுக்கு ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அள்ளித்தரும்.


5 . தௌஹித்ர


தெளஹித்ர என்றால் பேரன் ,பேத்திகள் என்று அர்த்தம். யாருக்கு சிராத்தம் செய்கிறோமோ அவருடைய பெண்ணின் குழந்தைகளான பேரன் பேத்திகள்.இறந்த தாத்தா பாட்டிக்கு மிகவும் பிரியமானவர்கள்.


மேலும் தௌஹித்ர என்பதற்கு வேறு பொருளும் சொல்லுகிறார்கள் ஆச்சார்யர்கள். அதாவது அமாவாசை திதி அன்று பசுமாட்டிற்கு நிறைய புற்கள் வைத்து, சாப்பிடச் செய்து, மறுநாள் பிரதமை அன்று அந்த மாட்டிலிருந்து கறந்தபாலை தயிராக்கி, அதை வெண்ணெயாக்கி, அதை நெய்யாகக் காய்ச்சினால் அதுவே தௌஹித்ர எனப்படும் பொருள்.அதாவது அப்போது காய்ச்சிய நெய் பித்ருக்களுக்கு மிகவும் உகந்தது.


6. குதப


குதப என்றால் சிராத்தம் செய்யவேண்டிய நேரம் என்று அர்த்தம். பகல் சுமார் 11.30க்கு மேல் 12.30 மணி வரையுள்ள காலமே குதப காலம்.கூடியவரை இந்த நேரத்தில் சிராத்தம் செய்வதும் இந்த நேரத்திற்குள்ளாக முடிப்பது மிகுந்த பலன்களைத் தரும்.


7.திலா


திலா என்றால் கருப்பு நிற எள் என்று அர்த்தம். இதுவும் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தரும் என்கிறது சாஸ்திரம். வெள்ளை எள் மஹா கணபதி போன்ற சில தெய்வங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.கருப்பு நிற எள், பித்ருக்களுக்கு மகிழ்ச்சியைத்
தரும். எனவே, சிராத்தத்தில் எள் உபயோகிப்பது மிக மிக அவசியம்.


1.பசும்பால் , 2.கங்கா ஜலம், 3.தேன், 4.வெண்பட்டு, 5.புத்துருக்கு நெய், 6.குதப காலம்
7.கருப்பு எள்... இந்த ஏழு பொருட்களையும் சிராத்தத்தில் சிறிதளவாவது சேர்த்து செய்தால் நிறைவான பலன்களைத் தரும். முன்னோரின் ஆசிகளையும் பெற்று,இனிதே வாழலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x