Published : 30 Aug 2019 12:25 PM
Last Updated : 30 Aug 2019 12:25 PM
வி.ராம்ஜி
ஆனைமுகனுக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தால், அளவற்ற செல்வங்களைத் தந்தருள்வார் என்பது உறுதி.
வரும் செப்டம்பர் 2ம் தேதி விநாயக சதுர்த்தி நன்னாள். இந்தநாளில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.
சரி... என்னென்ன அபிஷேகம்? என்னென்ன பலன்கள்?
விநாயக சதுர்த்தி நாளில் அல்லது சங்கடஹர சதுர்த்தி நாளில் பிள்ளையாரப்பனுக்கு பாலபிஷேகம் செய்வது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. தொடர்ந்து பாலபிஷேகம் செய்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம்.
பிள்ளையாரப்பனுக்கு, சந்தன அபிஷேகம் செய்வது மகா விசேஷம். பொதுவாகவே பிள்ளையாருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்.
விநாயகப் பெருமானுக்கு, தேனபிஷேகம் செய்து வேண்டிக்கொள்வது நல்ல நல்ல பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் பக்தர்கள். சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயக சதுர்த்தி பெருநாளில் பிள்ளையாருக்கு தேனபிஷேகம் செய்து மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். வீட்டில் நிம்மதியும் அமைதியும் குடிகொள்ளும்.
கணபதி பெருமானுக்கு விபூதி அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்வது ரொம்பவே விசேஷம். காரியத்தில் தடை இருப்பவர்கள், கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் ஆனைமுகனுக்கு விபூதி அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், தடைகள் யாவும் தவிடுபொடியாகும். நினைத்த காரியமெல்லாம் ஈடேறும்.
மஞ்சளால் விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தால், மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
அன்னத்தால் ஆனைமுகனுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், இல்லத்தில் இனிதான சம்பவங்கள் நிகழும். தனம் தானியம் பெருகும். வீட்டில் சுபிட்சம் நிலவும்.
இந்த விநாயக சதுர்த்தி நாளில், ஆனைமுகனுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். சகல சம்பத்துகளையும் பெற்று இனிதே வாழலாம் என்பது உறுதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT