

இரா.ஜெயபிரகாஷ்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் கடந்த 48 நாட்களாக ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தரிசனம் கொடுத்த வந்த அத்திவரதர் நேற்று இரவு அனந்தசரஸ் குளத்தில் சயனித்தார். பட்டர்களால் பள்ளியறைப் பாசுரங்கள் பாடப்பட்டு அத்திவரதர் சயனிக்க வைக்கப்பட்டு இந்த வைபவம் நிறைவுற்றது.
அத்திவரதருக்கு நேற்று மாலை நிறைவு பூஜைகள் நடைபெற்றன. அவருக்கு 48 வகையான பலகாரங்கள் நைவேத்யம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கோயிலில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் சயனிக்க வைக்க ஆகம விதிப்படி செய்யப்படவேண்டிய பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. பின்பு அத்திவரதருக்கு தைலக்காப்பு நடைபெற்றது.
அத்திவரதரை வைக்க உள்ள அனந்தசரஸ் குளத்தில் நீர் சுரந்தபடி இருந்தது. இந்த நீர் குளத்தில் இருப்பது, அத்திவரதரை மண்டபத்துக்குள் வைத்து பூஜை செய்ய இடையூறாக இருக்கும் என்பதால் ராட்சசமோட்டார்கள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறைஆணையர் பணீந்திரரெட்டி குளத்தைஆய்வு செய்த பின்னர் அத்திவரதருக்கு செய்யப்பட்ட அலங்காரம் கலைக்கப்பட்டு வஸ்திரம் மட்டும்சாற்றப்பட்டு அனந்த சரஸ் குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அப்போது கோயில் பட்டர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் மட்டும் குளத்துக்குள் இருந்தனர். அங்கு அத்திவரதரின் தலைப் பகுதி மேற்கிலும், திருவடிப்
பகுதி கிழக்கிலும் இருக்குமாறு சயனக்கோலத்தில் அங்குள்ள கருங்கல் கட்டிலில் வைத்தனர். அவரது தலைப் பகுதி கருங்கல் கட்டிலில் உள்ள திண்டில் வைக்கப்பட்டது. அவரை சுற்றி 16 நாக பாஷங்கள் வைக்கப்பட்டன.
சிறப்பு பூஜைகள்
இதைத் தொடர்ந்து பட்டர்கள், ஸ்தானிகர்கள் உள்ளிட்டோரால் ஆகம விதிப்படி செய்யப்பட வேண்டிய பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பள்ளியறை பாசுரங்கள் பாடப்பட்டு அத்திவரதர் சயனிக்க வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்தக் குளம் நீரால் நிரப்பப்பட்டது. அத்திவரதர் சயனிக்க வைக்கப்பட்ட பின் அந்த மண்டபத்தை நோக்கி அங்கிருந்தவர்கள் வணங்கினர்.
கடந்த 48 நாட்களாக பக்தர்களுக்கு நேரில் காட்சி அளித்த அத்திவரதர் இதன் பின்னர் 40 ஆண்டுகள் கழித்து 2059-ம் ஆண்டு மீண்டும்
குளத்தில் இருந்து எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதுவரைஅனந்தசரஸ் குளத்துக்குள் சயனக்கோலத்தில் இருந்தவாறே பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.