Published : 16 Aug 2019 09:54 AM
Last Updated : 16 Aug 2019 09:54 AM

ஆடி கடைசி வெள்ளி... அருள் தரும் அம்மன் தரிசனம்! 

வி.ராம்ஜி
ஆடி கடைசி வெள்ளியான இன்று (16.8.19) அருள் தரும் அம்மனை தரிசனம் செய்யுங்கள். அவளின் சந்நிதியில் நின்று, உங்கள் கஷ்டங்களையெல்லாம் சொல்லி முறையிடுங்கள். இனி உங்களுக்கு எல்லா சத்விஷயங்களையும் தந்து அருள்வாள் அம்பிகை.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதம் முழுக்கவே அம்மனைத் தரிசிப்பது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம். கோடை முடிந்து அடுத்த காலம் தொடங்கும் வேளையில், உடற்சூடு சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கக் கூடும் என்பதால்தான், இந்த ஆடி மாதத்தில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

மேலும் இந்த மாதத்தில், அம்மனுக்கு கூழ் வார்க்கும் வைபவமும் நடைபெறும். வேப்பிலைக்காரியின் சந்நிதியில் நின்றுவிட்டு வரும் போது, அந்த வேப்பிலையின் நறுமணம் நமக்குள் புகுந்து, நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் என்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, இந்த ஆடி மாதத்தில்தான், எங்கு பார்த்தாலும் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதும் நடக்கிறது. சக்தி மிக்க சக்தியின் ஆடி மாதத்தில், மறக்காமல் அம்மனை தரிசனம் செய்வது இரட்டிப்புப் பலன்களை வழங்கும் என்பது உறுதி.


இதோ... ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இன்று (16.8.19). எனவே இன்றைய நாளில், மறக்காமல் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். அம்பிகையை கண்ணாரத் தரிசியுங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் துக்கங்களையும் கவலைகளையும் அவளிடம் சொல்லி முறையிடுங்கள். இனி உங்கள் வாழ்வில், எல்லா சத்விஷயங்களையும் தந்து அருள்பாலிப்பாள் அன்னை பராசக்தி.


முடிந்தால், அருகில் உள்ள புற்றுக்கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். அங்கே உள்ள கிராம தேவதை அல்லது கிராம அம்மனை தரிசித்து வேண்டிக் கொள்ளுங்கள். புற்றுக்குப் பால் வார்த்து, பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வீட்டின் திருஷ்டியெல்லாம் கழிந்துவிடும். முன்னேற முடியாமல் இருந்த தடைகள் அனைத்தும் தகர்ந்துவிடும். வாழ்விலும் உங்களின் இல்லத்திலும் ஒளியேற்றித் தந்தருள்வாள் தேவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x